
posted 15th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
ஹொரோயின் போதைப்பொருள் முகவராக செயற்பட்ட இளைஞன் உள்ளிட்ட குடும்பப் பெண், ட்ரோன் கருவி, நவீன ஸ்கானர் கருவிகளுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்தனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் வை.டி செலரின்(40313) தகவலுக்கமைய செயற்பட்ட பொலிஸ் குழுவினர் 33 வயது மதிக்கத்தக்க போதைப்பொருள் வியாபாரியை சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து போதைப்பொருளை அளக்கின்ற இலத்திரனியல் தராசு மற்றும் 5 கிராம் 140 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டன.
இச்சந்தேக நபர் கடந்த 13ஆம் திகதி வீதியில் பயணம் செய்த பாடசாலை மாணவர் ஒருவரை வாகனம் ஒன்றினால் மோதி தலைமறைவாகி இருந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சந்தேக நபர் அக்கரைப்பற்று, நிந்தவூர், கல்முனை, பெரிய நீலாவணை, மருதமுனை, சம்மாந்துறை பகுதிகளுக்கு போதைப் பொருட்களை விநியோகிக்கின்ற பிரதான வியாபாரி என பொலிஸார் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து கைதான சந்தேக நபரின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதியில் உள்ள வீடுகள் பொலிஸாரின் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த சோதனை நடவடிக்கையின்போது கல்முனை பகுதி செயிலான் வீதியில் அமைந்துள்ள சந்தேக நபரின் சகோதரியின் வீடு மற்றும் சாய்ந்தமருது பகுதியில் உள்ள சந்தேக நபரின் வீடும் பொலிஸ் குழுக்களினால் சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
இதன்போது ஒரு தொகுதி போதைப்பொருட்கள் 2 அதி நவீன ஸ்கானர்கள், சி.சி.ரி.வி, டிவீஆர் உபகரணம் பதிவு செய்யப்படாத ட்ரோன் பறக்கும் சாதனம் உள்ளிட்டவைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.
குறித்த வீட்டில் இருந்த சந்தேக நபரின் சகோதரியான 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)