
posted 23rd February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், தமது தலைமையில் நடைபெற்ற முதலாவது சபை அமர்வுக்கு ஊடகவியலாளர்களை அழைத்திருந்தமை தொடர்பில் உறுப்பினர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பிரதேச சபையின் 59 ஆவது மாதாந்தக் கூட்டம் புதிய தவிசாளர் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற போது, தவிசாளரின் அழைப்பின் பேரில் சபை அமர்வு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் பிரசன்னமாக இருந்தமை உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது.
முன்னாள் தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற சுமார் 58 மாதாந்த அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்களெவரும் அழைக்கப்படவோ, கலந்து கொள்ளவோ இல்லையெனத் தெரிவித்த உறுப்பினர்கள், புதிய தவிசாளர் அமர்வுக்கு ஊடகவியலாளர்களை அழைத்திருந்தமை ஓர் முன்மாதிரியான செயற்பாடெனவும் பாராட்டினர்.
சபை அமர்வில் உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ. யூசுப் லெப்பை அமர்வில் உரையாற்றும் போது ஊடகவியலாளர்களின் பிரசன்னத்தை வரவேற்றதுடன் இதற்கு ஆவன செய்த தவிசாளர் மாஹிரையும் வெகுவாகப்பாராட்டினார்.
மக்களின் வாக்குகளைப் பெற்று அவர்களது பிரதி நிதிகளாக வந்துள்ள நாம் இச் சபையில் முன்னெடுக்கும் செயற்பாடுகளையும் மக்கள் நலன் தொடர்பில் நாம் எழுப்பும் குரல்களின் முக்கியத்துவத்தையும் மக்களும், வெளியுலகும் அறிய வேண்டும்.
இதற்கு ஊடகவியலாளர்களின் செய்தி அறிக்கையிடல்களே வழிவகுக்கும்.
ஆனால் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் சபை அமர்வுகளுக்கு அழைக்கப்பட்ட இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் இப்போது முதல் தடவையாக சபை அமர்வுக்கு ஊடகவியலாளர்களை தவிசாளர் அழைத்துள்ளமை வரவேற்கத்தக்கதும், ஓர் முன்மாதிரியான செயற்பாடு எனப் பாராட்டவும் தக்கது எனவும் உறுப்பினர் யூசுப் லெப்பை கூறினார்.
மேலும் புதிய தவிசாளராகப் பதவி ஏற்றுள்ள தவிசாளர் மாஹிர் உத்வேகத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், தினமும் களத்தில் நின்று தமது மக்கள் பணிகளை முன்னெடுத்து வருவதும் சம்மாந்துறை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)