
posted 20th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பூனைத்தொடுவாயில் படுகொலை செய்யப்பட்ட 10. பேரின் 29 வது நினைவேந்தல்
வடமராட்சிபெப்18
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பூனைத்தொடுவாய் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை கடலில் வைத்து 1994 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 10 பேரின் 29 வது நினைவேந்தல் சனிக்கிழமை (18) வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நினைவேந்தல் இடம் பெற்றது.
கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவர் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில், சென்மேரிஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகத்திற்கும், கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்திற்கும் இடையில் சினேகபூர்வ விளையாட்டும் இடம்பெற்றது.
பங்குபற்றிய வீரர்களுக்கு பணப்பரிசில்களும் வளங்கிவைக்கப்பட்டது.
சர்வதேசமும் இணைந்தே எமது போராட்டத்தை அழித்தமையால் எமக்கான நீதியை அவர்களே தரவேண்டும் - கலாரஞ்சினி
சர்வதேசமும் இணைந்தே எமது போராட்டத்தை அழித்தமையால் எமக்கான நீதியை அவர்களே தரவேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்தார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க மாவட்ட அலுவலகதில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 20ம் திகதியுடன் 6 ஆண்டு நிறைவடைகிறது. இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை.
இனத்தாலும், மொழியாலும் ஒதுக்கப்பட்டே எமது பிள்ளைகள் ஆயுதம் ஏந்தி போராடினர். வடக்கு கிழக்கில் உள்ள அனைவரும் அதற்காகவே போராடினர்.
அந்த போராட்டத்தின் ஊடாக இன்று சர்வதேசம் எம்மை பார்க்கின்றது. இன்றும் நாம் ஈழத்தில்தான் இருக்கிறோம்.
உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்திற்கு இலங்கை அரசினால் தீர்வு வழங்க முடியாது. இதுவரை இலங்கை அரசினால் நிறுவப்பட்ட 12 ஆணைக்கு குழுக்களுடன் பேசினோம். நீதி எமக்கு கிடைக்கவில்லை.
அண்மையில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடன் சந்திக்க கேட்டனர். அதனை நாங்கள் மறுத்தோம். இந்த ஆணைக்குழு அரசின் ஆணைக்குழு. அது பாதிக்கப்பட்டோருக்கு நீதி தருவதாக இருந்ததில்லை.
ஜெனிவாவின் 31வது கூட்டத்திலிருந்து நாங்கள் சென்று வருகின்றோம். சுயாதீன ஆணைக்குழு நிறுவப்பட்டதாகவும் அவர்களுடன் பேசுமாறும் கூறினர்.
இதன்போது குறித்த ஆணைக்குழுவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரில் ஐவரது விபரங்களை கையளித்தோம். இன்றுவரை பதில் இல்லை. பதில் சொல்ல முடியாத ஆணைக்குழுக்களுடன் பேசி பயன் இல்லை. அரசுக்கு ஆதரவாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும் செயற்படுகிறது.
நாம் இலங்கை அரசை நம்ப போவதில்லை. அவர்கள் எமக்கு நீதி தரப்போவதில்லை. சர்வதேசத்தை நம்பி நீதி கேட்கிறோம். அதனை பெற்று தரவேண்டிய தேவை உள்ளது.
ஏனெனில் சர்வதேசமும் இணைந்தே விடுதலை புலிகளையும், எமது போராட்டத்தையும் தோற்கடித்தனர். இலங்கை அரசு மட்டும் யுத்தம் செய்திருக்கவில்லை. சர்வதேச நாடுகளும் இணைந்தே தோற்கடித்தது.
இந்த நிலையில், எமது தொடர் போராட்டம் 6 ஆண்டினை நிறைவு செய்கிறது. எதிர்வரும் 20ம் திகதி கிளிநொச்சியில் மாபெரும் போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளோம்.
குறித்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் கட்சி பேதங்கள் இன்றி ஆதரவு தர வேண்டும். வர்த்தகர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் வேண்டும் என இதன்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
நல்லூரில் வாள்வெட்டு
நல்லூரில் இடம்பெற்ற வாள்வெட்டில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாட்டுக் கன்றொன்று சிவராத்திரி அன்று பலி
சிவராத்திரி தினமான நேற்று முன்தினம் (18) மாட்டுக் கன்று ஒன்றை வெட்டி அதன் தலையையும் இறைச்சி கழிவுகளையும் கோண்டாவில் முத்தட்டு வீதியில் விஷமிகள் வீசிச் சென்றுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி மக்களால் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், நல்லூர் பிரதேச சபை கழிவகற்றும் வாகனத்தின் ஊடாக கன்றின் இறைச்சி கழிவுகளை அங்கிருந்து அகற்றினர்.
இந்துக்களின் புனித விரதங்களில் ஒன்றான சிவராத்திரி விரத நாளன்று மாட்டுக் கன்றை வெட்டி அதன் தலையை வீசி சென்றமை அப்பகுதி மக்களிடம் கவலையை ஏற்படுத்தி இருந்தது.
விஷமிகளின் இந்த செயல்பாட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸாரிடம் அவர்கள் கோரியுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)