
posted 19th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
தேர்தல் காலதாமதம் ஏற்படும் கால வரையறைக்குள் புதிய தேர்தல் வட்டார முறையினை சட்டபூர்வமாக்கி அதன் அடிப்படையில் அடுத்த உளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதனை கவனத்தில் கொள்க.
இவ்வாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸன் அலி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 9 ம் திகதி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், நிதி பற்றாக்குறை காரணமாக தற்பொழுது ஒத்திவைக்கப்பட வேண்டிய ஒரு நிலமை தொடர்வதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அத்தியாவசிய தேவைகளை முதன்மைப்படுத்த வேண்டிய காரணத்தால் தேர்தலுக்கான மொத்த நிதியையும் உடனடியாக ஒதுக்க முடியாது என அரச திறைசேரி அறிவித்துவிட்டதனால் மேற்கொண்டு தேர்தலுக்கான ஆயத்த வேலைகள் திடீரென இடைநிறுத்தப்பட்டு தபால் வாக்களிப்புக்கான காலவரையும் கூட நீடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல்கள் உடனடியாக நடைபெறும் சாத்தியம் அடுத்த பல மாதங்களுக்கு இல்லை என ஊகிக்க முடியும். இந்தப்பின்னனியில் ஏற்கனவே உங்களால் முன்வைக்கப்பட்ட உறுப்பினர்கள் தொகை குறைப்பு யோசனையானது தற்போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்பது பொருத்தமாகவிருக்கும்.
8000 உறுப்பினர்கள் தொகையினை 4000 ஆகக்குறைப்பதன் மூலம் அடுத்த நான்காண்டுகளில் ஐந்து பில்லியன் ரூபாய்க்களை சேமிப்பதற்கு முடியுமென்று நீங்கள் கூறியதனைத் தொடர்ந்து அதற்கான முதல் படியாக வட்டார எல்லை நிர்ணயத்துக்கும் நீங்கள் உத்தரவிட்டுள்ளீர்கள். அதற்கேற்ப எல்லை நிர்ணயப் பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் உள்ளதாக அறிகிறோம்.
நாட்டில் உள்ள பொருளாதாரச் சிக்கல்கள் திட்டமிட்டப்படாத முறையில் கையாளப்பட்டதால் தற்போது அரச தொழில் வாய்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆயுதப்படைகளிலும், அரச சேவைகளிலும் ஆள்குறைப்பு செய்ய வேண்டும் என சர்வதேச துறை சார்ந்த நிபுணர்கள் மட்டத்தால் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ள இவ்வேளையில், 4000 உறுப்பினர்களாக கொண்ட புதிய உள்ளுராட்சி முறைமையை உடனடியாக செய்யப்படுவதற்கான உரிய நடவடிக்கையை துரிதப்படுத்துவதானது சிறந்ததொரு செயலாக சர்வதேச ஆலோசகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.
எனவே தேர்தல் காலதாமதம் ஏற்படும் கால வரையறைக்குள் புதிய தேர்தல் வட்டார முறையினை சட்டபூர்வமாக்கி அதன் அடிப்படையில் அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதனை கவனத்தில் கொள்வது நல்லது என்ற யோசனையை முன்வைக்கின்றேன். அத்துடன் தேர்தலுக்கான புதிய தினத்தையும் தற்போதே அறிவிக்கவும் உங்களால் முடியும்.
நாட்டின் பொருளாதாரத்தை திட்டமிட்டு வளப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் அனைவரும் 5 பில்லியன் ரூபாயை உடனடியாக சேமிக்கக்கூடிய உங்களது இந்த முயற்சியை ஏற்றுக்கொள்வார்கள் என்பது திண்ணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)