
posted 15th February 2023
மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வரத்தில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இவ் வருடம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால் இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் நீராடும் பாலாவி குளத்தில் முதலைகள் இருக்கலாம் என்ற அச்சம் காணப்படுவதால் வன வலங்கு பாதுகாப்பு இலாக பகுதினரை பாலாவியைப் பரிசோதனை செய்து பக்தர்கள் அச்சமின்றி நீராடக்கூடிய வசதிகளைச் செய்யுமாறு கேட்டப்பட்டுள்ளார்கள்.
எதிர்வரும் 18ந் திகதி திருக்கேதீஸ்வர கோவிலில் நடைபெற இருக்கும் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தலைமையில் திருக்கேதீஸ்வர ஆலய மண்டபத்தில் செவ்வாய்கிழமை (14) கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலயம் சார்பாக திருக்கேதீஸ்வர ஆலய செயலாளர் திரு எஸ்.எஸ். இராமகிருஷணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஏழு வருடங்களாக இவ் ஆலயத்தில் புணருத்தான வேலைகள் இடம்பெற்றமையால் இக் கோவிலில் பாலாலயம் அமைத்து சுவாமிகள் வழிபாடு நடைபெற்று வந்தன. எல்லாம் முடிவுற்ற நிலையில் இம்முறை சிவராத்திரி விழா இடம்பெற இருக்கின்றது.
எனவே, இலங்கையின் நாலா பக்கமும் இருந்து பக்கதர்கள் வருவதனை எதிர்பார்த்து எல்லாவிதமான ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
திருக்கேதீஸ்வரம் வரும் பக்தர்கள் நலன்கருதி சகல ஏற்பாடுகளும் நிறைவுற்று இருக்கின்றபோதும். மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயம் வரை செல்லும் பிரதான வீதி சீரற்ற நிலையில் காணப்படுவதால் அரசாங்க அதிபர் வடமாகாண ஆளுநருடன் தொடர்பு கொண்டதைத் தொடர்ந்து இவ் வீதி விஷேட நிதியின் மூலம் உடன் புணரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக்கள் , சுகாதாரம் , அன்னதானம் , தாகசாந்தி நிலையம் , குடிநீர் போன்ற முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதுடன், இதற்கான சகல நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும், 17 ,18 , 19 ஆகிய திகதிகளில் ஆலய சூழலில் உள்ள நான்கு மடங்களிலும் அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)