
posted 24th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
குருந்தூர்மலையில் விகாரை அமைக்கும் பணியை இடைநிறுத்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், பொலிஸ் காவலுடன் குருந்தூர்மலையில் பௌத்த விகாரை முழுமை பெற்றுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதி செய்கின்றன.
தமிழரின் தொன்மை வாய்ந்த ஆதி ஐயனார் கோயில் சூழலை பௌத்த தொன்மை நிறைந்துள்ளதாகக் கூறி தொல்பொருள் திணைக்களம் உரிமை கொண்டாடியது. இதைத் தொடர்ந்து அங்கு விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், சுமார் 700 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கவும் திட்டமிடப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தின் இந்த முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், விகாரை கட்டுமானத்தை நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்ந்துவரும் நிலையில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்தன.
கடந்த வருடம் ஜூலை 19ஆம் திகதி முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது. 12/06/2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையில் தொடர்ந்து பேணுமாறு கட்டளை பிறப்பித்திருந்தது. எனினும், கட்டளையை மீறி தொடர்ந்து கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும், அரசியல் பிரதிநிதிகளும், தமிழ் மக்களும் குருந்தூர்மலை பகுதியில் கடந்த 2022/09/20 அன்று போராட்டம் முன்னெடுத்திருந்தனர்.
இதன் தொடர்சியாக 21/09/2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்துக்கு வேறு சில 'பி' அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆதி ஐயனார் ஆலயம் சார்பில் சட்டத்தரணிகளால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
இதனிடையே கட்டுமானப் பணிகள் தொடர்வது குறித்து பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கின்மீதான கட்டளைக்காக கடந்த வருடம் நவம்பர் 24 ஆம் திகதி மீண்டும் ஒரு கட்டளையை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் வழங்கியது. அதாவது, கடந்த 19.07.22 அன்று ஏற்கனவே, வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து யாராவது புதிதாக கட்டடங்களை அல்லது மேம்படுத்தல்களை குருந்தூர்மலையில் அமைத்தால் அதனை நீதிமன்ற அவமதிப்பாக கருதமுடியும். அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் முல்லைத்தீவு பொலிஸார் உரியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது. இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டபோது குருந்தூர்மலை விகாரை கட்டுமானம் முழுமையடையாத நிலையிலேயே இருந்தது.
நேற்று (23) வியாழக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வடக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் க. சிவநேசன், தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் ஆகியோர் குருந்தூர்மலைக்கு சென்றிருந்தனர்.
அந்த சமயம், பௌத்த கட்டுமானப் பணிகள் இடம்பெற்றமைக்கான அடையாளங்கள் காணப்பட்டன. இரவு நேரத்தில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்திருந்தன. இதற்காக மின்சாரம் வழங்க ஜெனரேட்டர்களும் அங்கு இருந்தமை அவதானிக்கப்பட்டது.
இதேவேளை, குருந்தூர்மலை கட்டுமானம் நடைபெறும் இடத்தில் 24 மணி நேரமும் பொலிஸார் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, நேற்று அப்பகுதிக்கு சென்றுவந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் இது குறித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)