
posted 19th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
காங்கேசன்துறை தையிட்டி நரசிம்ம வைரவர் ஆலயத்தின் மூலவர் விக்கிரகம் காணாமல் போயுள்ளது. அத்துடன், விக்கிரகம் இருந்த இடத்தில் புத்தர் சிலைகள் வைத்து வழிபடப்பட்டுள்ளன. அத்துடன், அந்த ஆலயத்தை விகாரையாக மாற்றும்விதத்திலும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
தையிட்டி நரசிம்ம வைரவர் ஆலயம் கடந்த 33 வருடங்களாக இராணுவத்தினரின் பிடியிலிருந்து அண்மையிலேயே விடுவிக்கப்பட்டது. இந்தநிலையில், அந்த ஆலயத்தில் வழிபாட்டுக்காக சென்ற மக்களே மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினர்.
இதுதவிர, ஆலய சூழல்களில் பௌத்த மதத்தை அடையாளப்படுத்தும் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஆலயத்தின் சுவர்களிலும் புத்தரின் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. ஆலயத்தின் வாசலிலும் சந்திரவட்டக்கல் பதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, கடந்த 2021ஆம் ஆண்டு டிசெம்பர் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலய பிரதேசங்களில் உள்ள இந்து ஆலயங்களின் சிலைகள் திருடப்பட்டு, கொழும்புக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட 20 சிலைகளை காங்கேசன்துறை பொலிஸார் மீட்டனர்.
இது தொடர்பான பொலிஸாரின் விசாரணைகளில் இராணுவம் மற்றும் கடற்படையினர் தொடர்புபட்டனர் என்று கூறப்பட்ட நிலையில், இந்த விசாரணைகள் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)