
posted 19th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included]
இலங்கையில் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் கட்சியையும், தமது புதிய சின்னத்தையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து விழிப்பூட்டும் சுவரொட்டிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் காட்சிப்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தேர்தலில் தனித்தே கட்டுப்பணம் செலுத்தி வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ள நிலையில்,
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எனும் பெயரில், குத்துவிளக்கு சின்னத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளன.
இந்த நிலையிலேயே புதிய சின்னமான குத்து விளக்கையும், கட்சியையும் தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வேரூன்றச் செய்யும் நடவடிக்கையாக மேற்படி சுவரொட்டிகள் தமிழ்ப் பிரதேசங்களெங்கும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழின ஆன்மாவின் ஒருமதித்த சின்னம் என்ற வாசகத்துடன் குத்து விளக்கு சின்னம் பொறிக்கப்பட்டு புள்ளடி இடப்பட்டும், குறிப்பிட்ட ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., த.தே.க, ஜனநாயக போராளிகள் கட்சியிகளின் தலைவர்களது படங்கள் கொண்டதாகவும் குறித்த சுவரொட்டி காணப்படுகின்றது.
இலங்கையிலேற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால் அச்சிடும் தாள்களுக்கு தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்பட்டுள்ளதுடன், அச்சக கட்டணங்கள் மிகவும் உயர்வடைந்துள்ள நிலையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த சுவரொட்டிகள் தேர்தல் கால சுவரொட்டிப்போரை ஆரம்பித்துவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)