மன்சூரின் பெயரை நூலகத்திற்கு சூட்டுவதை சிலர் எதிர்ப்பது கவலையளிக்கிறது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

இன, மத பேதமின்றி தமிழ் மக்களுக்கும் பெரும் சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர். மன்சூரின் பெயரை கல்முனை பொது நூலகத்திற்கு சூட்டுவதை சிலர் இன ரீதியாக சிந்தித்து, எதிர்ப்பதானது மிகவும் கவலையளிக்குரிய விடயமாகும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ஏ.எல். அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது;

1977ஆம் ஆண்டு முதன்முறையாக கல்முனைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஏ.ஆர். மன்சூர், 1994 ஆம் ஆண்டு வரை சுமார் 17 வருட காலம் அரசியல் அதிகாரத்தின் ஊடாக மூவின மக்களுக்கும் சேவையாற்றியுள்ளார். இக்காலப் பகுதியில் மாவட்ட அமைச்சராகவும் பின்னர் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்து கல்முனைத் தொகுதிக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கும் சேவையாற்றிய ஓர் அரசியல் தலைவராக அவர் போற்றப்படுகிறார்.

மன்சூரின் பெயரை நூலகத்திற்கு சூட்டுவதை சிலர் எதிர்ப்பது கவலையளிக்கிறது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

A. R. Mansoor

குறிப்பாக கல்முனைத் தொகுதியில் அவரால் மேற்கொள்ளப்பட்ட பெளதீக வள, உட்கட்டமைப்பு அபிவிருத்திகளாயினும் பாடசாலைகளின் அபிவிருத்திகளாயினும் தொழில் வாய்ப்புகள் வழங்குவதிலும் இன மத பேதமின்றியே அவற்றை அவர் முன்னெடுத்திருந்தார் என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும்.

அத்துடன் 1977ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராகவும் 1979ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டம் உருவாக்கப்பட்டது முதல் அம்மாவட்டத்திற்கான அமைச்சராகவும் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவினால் நியமனம் செய்யப்பட்டிருந்த ஏ.ஆர். மன்சூர், யுத்த மேகம் கருக்கட்டியிருந்த சவால் நிறைந்த காலப்பகுதியில் இவ்விரு மாவாட்டங்களிலும் தமிழ் மக்களுக்கு அரும்பணியாற்றியிருக்கிறார் என்பது வரலாறாகும்.

இத்தகைய பின்னணியில்தான் அவர் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் ஒன்றித்து வாழ்கின்ற கல்முனை நகரில் அப்போதைய வெளிவிவகார அமைச்சரான ஏ.சி.எஸ். ஹமீதின் அனுசரணையுடன் பொது நூலகம் ஒன்றை நிறுவி, இரு சமூகங்களினதும் கல்வி மற்றும் அறிவு விருத்திக்கு வித்திட்டிருந்தார்.

இவ்வாறான ஒரு மகானின் பெயரை அவரால் கொண்டு வரப்பட்ட நூலகத்திற்கு சூட்டுவதை கல்முனை மாநகர சபையின் சில தமிழ் உறுப்பினர்கள் எதிர்த்து, அவ்விவகாரத்தை சர்ச்சையாக்கி, இன முரண்பாட்டுக்கு தூபமிட முயற்சிப்பதானது மிகவும் கவலையளிக்கிறது.

ஏ.ஆர். மன்சூர் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி என்ற போதிலும் அவர் கல்முனைத் தொகுதி வாழ் தமிழ் சமூகத்திற்கும் நேர்மையுடன் தலைமைத்துவம் வழங்கியிருந்தார் என்பதை பெருமையுடன் பறைசாற்றுகின்ற இவ்வுறுப்பினர்கள், அரசியல் நோக்கத்திற்காக நியாயமற்ற முறையில் அவரது பெயர் சூட்டலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதானது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை விரும்பாத சக்திகள் எவையும் இதன் பின்னணியில் செயற்படுகின்றனவா என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் தாயகத்தில் சுயாட்சி போன்ற விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் பயணித்து வருகின்ற சூழ்நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சி நிர்வாகத்தின் கீழுள்ள கல்முனை மாநகர சபையில் தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரே ஏ.ஆர். மன்சூரின் பெயர் சூட்டல் விவகாரத்தை வரிந்து கட்டிக்கொண்டு சர்ச்சையாக மாற்றியிருப்பதென்பது இரு சமூகங்களினதும் சார்பான கட்சிகளின் புரிந்துணர்வு செயற்பாடுகளை மழுங்கடித்து விடும் என்பதை சம்மந்தப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மன்சூரின் பெயரை நூலகத்திற்கு சூட்டுவதை சிலர் எதிர்ப்பது கவலையளிக்கிறது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)