
posted 27th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரச மரத்துக்கு கீழே இராணுவத்தினரால் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.
தவறுதலாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பொறுப்பதிகாரி வருத்தம் தெரிவித்தார் என வலி கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தி. நிரோஸ் தெரிவித்தார்.
நிலாவரை கிணற்றுப் பகுதியை தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில், அந்த பகுதியில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் புத்தர் சிலை வைக்க ஏற்கனவே முயற்சிகள் செய்யப்பட்ட நிலையில், அவை தடுத்து நிறுத்தப்பட்டு வந்தன.
நேற்று அதிகாலை அங்கு சிறிய குடில் அமைக்கப்பட்டு புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டதாக பரவிய தகவலையடுத்து அங்கு பொதுமக்கள் குழுமினர். வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஸும் சம்பவ இடத்துக்கு சென்றார்.
“பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து அங்கிருந்த புத்தர் சிலையை இராணுவம் அகற்றியது. நான் அங்கு சென்றபோது குடில் மாத்திரமே இருந்தது. அந்த குடிலையும் உடனடியாக அகற்றவேண்டுமென கூறினேன். அங்கிருந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் தொலைபேசியில் மேலதிகாரிடம் பேசிவிட்டு, கோபமாக குடிலை பிடுங்கிச் சென்றார்.
பின்னர் முகாமிலிருந்து வந்த அதிகாரியொருவர் தன்னை மேஜர் மஞ்சுள என அறிமுகப்படுத்தி, சிறு தவறு நடந்துவிட்டதாக வருத்தம் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு பொலிசாரும் வந்தனர். புத்தர் சிலை அகற்றப்பட்டு நிலைமை சுமுகமாகிய பின்னர் அவர்கள் சென்றனர்” என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)