
posted 20th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இலங்கையில் இதுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குமாறு, இலங்கை ஜனாதிபதிக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள்” எனும் தலைப்பிலான போராட்டம் ஒன்று கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் இடம்பெற்ற போது, மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கம், மற்றும் தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவழங்கக்கோரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான ஊடகவியலாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ. கருணாகரமிடம் ஜனாதிபதிக்கான குறித்த கோரிக்கை மகஜர் கையளிக்கப்ப்டது.
2000 ஆம் ஆண்டில் பி.பி.சி. செய்தியாளர் மயில் வாகனம் நிமலராஜன் படுகொலையுடன் அரங்கேறிய ஊடகப் படுகொலைகள் நீண்டே சென்றிருந்தன.
தமிழர் தயாகப் பகுதிகளில் பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுளள்னர். பலர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. ஆனால் இவற்றுடன் தொடர்புடைய சூத்திரதாரர்கள் எவரும் கைது செய்யப்படவோ, சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லையென்பது பட்டவர்த்தனமான உண்மையாகும்.
எனவே, கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களுக்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்பட வேண்டும்” என மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)