தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பொதுப்பட்ட மளிப்பு விழா, பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற விருக்கின்றது.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தலைமையில், எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை இப்பொதுப்பட்டமளிப்பு விழா நடைபெறும்.

இதன்படி நான்கு நாட்களுக்கு பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன், எட்டு அமர்வுகளாக நிகழ்வுகள் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பொதுப் பட்டமளிப்பு விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தலைமையில், பல்கலைக்கழக கலைப்பீட மண்டபத்தில் இன்று (01.02.2022) நடைபெற்றது.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்குழுத்தலைவர் பேராசிரியர் ஏ.ஜௌபர், பல்கலைக்கழக ஊடகப் பிரிவு இணைப்பாளர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா, பிரிவு செயலாளர் பேராசிரியர் எம்.ஏ.எம். பௌசர், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் (மாணவர் விவகாரம்) பாரிஸா ஹஸன் ஆகியோரும் இந்த ஊடக மாநாட்டில் கலந்து கொண்டனர்.

ஊடக பிரிவு இணைப்பாளர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாவின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து உபவேந்தர் பேராசிரியர், கலாநிதி ரமீஸ் அபூபக்கர் பொதுப்பட்ட மளிப்பு விழா தொடர்பில் விளக்கமளித்தார்.
மேலும் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இந்த பொதுப்பட்டமளிப்பு விழாவில், மொத்தமான 2621 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

1 ஆம் அமர்வில், பிரயோக விஞ்ஞானங்கள், பொறியியல் பீடத்தினைச் சேர்ந்த 475 மாணவர்களும், 2 ஆம் அமர்வில் கலைப்பீடத்தினைச் சேர்ந்த 219 மாணவர்களும், 3 ஆம் அமர்வில் கலைப்பீடத்தினைச் சேர்ந்த 348 மாணவர்களும், 4 ஆம் அமர்வில், இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழி பீடத்தினைச் சேர்ந்த 329 மாணவர்களும், 5 ஆம் அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தினைச் சேர்ந்த 313 மாணவர்களும், 6 ஆம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 277 மாணவர்களும், 7 ஆம் அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 348 மாணவர்களும், 8 ஆம் அமர்வில் கலை, கலாச்சார பீட மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடங்களின் 312 வெளிவாரி மாணவர்களும் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

அத்துடன், 4 பேர் முதுதத்துவ மானிப்பட்டங்களையும், 23 பேர்வியாபார நிருவாக முதுமானிப்பட்டங்களையும், 2 பேர் முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாவினையும் பெறவுள்ளனர்.

இதேவேளை இப்பொதுப்பட்டமளிப்பு விழாவில், பேராதனை பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.தில்லைநாதன், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ஜௌபர் சாதிக் ஆகிய இருவருக்கும் கௌரவ கலாநிதிப்பட்டங்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விழாவில், கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, உயர் நீதிமன்ற நீதியரசர் திலீப் நவாஸ், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, றுகுணு பல்கலைக்கழக பேராசிரியர் காமினி சேனனாயக்க (முன்னாள் உபவேந்தர்) ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன.

விழாவிற்கு வருகை தரும் பட்டம்பெறும் மாணவர்கள் குறைந்த அளவு குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தருமாறும், அனுமதி அட்டை, கொவிட் தடுப்பூசி அட்டை என்பவற்றுடன் வருகை தருவோர் மட்டுமே பட்டமளிப்பு விழாவளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவரெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House