
posted 22nd February 2022
தாதியர்கள் இன்றித் தடுமாறும் வைத்தியசாலை
வல்வெட்டித்துறை பிரதேச அரசினர் வைத்திசாலையில் உள்ள வைத்திய விடுதிகள், தாதியர்கள் இன்றி ஒரு மாத காலத்துக்கு மேலாக மூடப்பட்டுக்கிடக்கிறது.
எட்டு தாதிய உத்தியோகத்தர்கள் பணியாற்றிய வைத்தியசாலையில் தற்போது மூன்று தாதிய உத்தியோகத்தர்களே பணியாற்றி வருகிறார்கள். ஏனையோர் சேவை மூப்புக் காரணமாக சேவையில் இருந்து நீங்கிவிட்டனர். இதன் காரணமாக நான்கு நோயாளர் விடுதிகளையும் இயக்க முடியாமல் முடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடற்தொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு பொது மக்கள் தரப்பால் நேரடியாக முறையிடப்பட்டு பரிகாரம் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தது. உரிய நடவடிக்கைகளை தாமதமின்றி மேற் கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
எனினும் தேவையான தாதிய உத்தியோகத்தர்களை நியமிக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்படும் நோயாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மூடப்பட்ட விடுதிகளில் பிரசவ விடுதியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் திருடியவர்கள் யாழ்ப்பாணத்தில் கைது
முல்லைத்தீவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது.
கடந்த டிசம்பர் மாதம் முல்லைத்தீவு நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் 20 பவுண் நகை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர், இன்றைய தினம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
சாவகச்சேரி ,நெல்லியடி ஊர்காவற்துறை, பகுதியைச் சேர்ந்த மூவர் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 பவுண் நகையும் மீட்கப்பட்டுள்ளதாகவும், திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் என யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
மூதாட்டி அடித்து படுகொலை
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டப் பகுதியில், தனிமையில் இருந்த மூதாட்டி அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு அடித்து படுகொலை செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த காணிக்கையம்மா ஜெயசீலி பூபதி (வயது-72) என தெரிவிக்கப்பட்டது.
குறித்த மூதாட்டி இன்று செவ்வாய்க்கிழமை மதியம் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் கூறினர்.
கதிரையில் இருந்து ஜெபித்துக் கொண்டிருந்தபொழுது குறித்த மூதாட்டி பின் பக்கமாக வந்த மர்ம நபர்கள் அடித்துப் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளைச் சம்பவத்துக்கு வந்தவர்களே இதனைச் செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் - ஓட்டோ நேருக்கு நேர் மோதின
யாழ். ஆரியகுளம் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் - ஓட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. ஆரியகுளம் சந்திக்கு
அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஓட்டோ என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் ஓட்டோவை செலுத்திச் சென்ற நபருக்கு தலை பகுதியில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஹெரோயின் வியாபாரத்தில் 13 வயது சிறுமி
வடமராட்சி - நெல்லியடி - குடவத்தை பகுதியில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் 13 வயது சிறுமியும் தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
சிறுமியை காவலுக்கு ஆட்களை வைத்து வருபவர்களை அடையாளம் கண்டு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House