தம்மைக் காட்டிக் கொடுக்கும் நாயைக் கொலை செய்தவர்கள் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

போதைப்பொருளுக்கு அடிமையாகி ஊரில் திருட்டுக்குச் செல்லும் போது தம்மை பார்த்து குரைப்பதாலேயே நாயைக் கொலை செய்ததாக சந்தேக நபர்களில் ஒருவர் விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

நாயை கைக்கோடாரியினால் வெட்டிக் கொலை செய்தவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அதனை காணொலி பதிவு செய்தவரே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நாய் ஒன்றை கைக்கோடாரியினால் வெட்டி கொடூரமாகக் கொலை செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியது. இந்தச் சம்பவம் புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றமை விசாரணைகளில் தெரிய வந்தது.

புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 21 மற்றும் 35 வயதுடைய இருவர் கடந்த வியாழக்கிழமை ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். நாயை வெட்டிக் கொல்லப் பயன்படுத்திய கைக் கோடாரி மற்றும் அதனை காணொலி எடுத்த அலைபேசி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

“போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் ஊரில் திருட்டுகளில் ஈடுபட்டோம். எம்மைக் கண்டவுடன் நாய் குரைத்துக் காட்டிக் கொடுத்துவிடும். இதனால் அங்கு இடம்பெறும் திருட்டுகளுடன் எமக்குத் தொடர்பு உண்டு என பொலிஸார் விசாரணைக்கு அழைப்பார்கள். அதனால்தான் அந்த நாயைக் கொலை செய்தோம்.






கைக் கோடாரியால் நாயை வெட்டி கொலை செய்தவர் அன்றைய தினம் போதையில் இருந்தார். சில நாள்களுக்கு முன்பாகவே நாயை கொலை செய்துவிட்டோம். அதன் காணொலி சகோதரனின் அலைபேசியில் இருந்தது. அவர் தவறுதலாக ரிக்ரொக்கில் பதிவேற்றப்பட்டுவிட்டது” என்று காணொலியை பதிவு செய்தவர் விசாரணையின் போது தெரிவித்தார். சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தம்மைக் காட்டிக் கொடுக்கும் நாயைக் கொலை செய்தவர்கள் கைது | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)