
posted 27th February 2022
தமிழர் தாயகத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை செய்வதற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாரள் மிச்சல் பச்லெட் மற்றும் உறுப்பு நாடுகளின் தலைமைப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடித்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடந்த ஆண்டின் ஜனவரி 15, பெப்ரவரி 24, செப்ரெம்பர் 8 ஆகிய திகதிகளில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை மீண்டும் வலியுறுத்துவதோடு அதன் தொடர்ச்சியாக தற்போதைய கடிதத்தை அனுப்புகின்றோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 46/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அந்தத் தீர்மானம் தொடர்பில் நாம் ஏமாற்றமடைவதாக கவலை வெளியிட்டிருந்தோம். குறித்த தீர்மானமானது, மனித உரிமைகள் மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்த விடயங்கள் சம்பந்தமாக தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைக்கூட பூர்த்திசெய்யாதவொரு தீர்மானமாக இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.
மேலும், 46/1 தீர்மானத்தின் ஆறாவது செயற்பாட்டுப் பந்தியின் அடிப்படையில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறப்படுதலை இத்தீர்மானம் தாமதமடையச் செய்கின்றது என்பதை குறிப்பிட்டதோடு, 51ஆவது அறிக்கையில் இலங்கை பற்றி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்திருப்பதானது பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புககூறல் என்பவற்றுக்கான வாய்புக்களை மேலும் காலதாமதமாக்குகிறது.
ஆகவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
இலங்கையின் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக அத்துமீறல்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு ஐ.நா.வின் விசேட அறிக்கையிடலாளர் ஒருவரை நியமிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
தேசிய பாதுகாப்பு, அபிவிருத்தி, வனப்பாதுகாப்பு, மற்றும் தொல்பொருள் ஆரய்ச்சி ஆகியவற்றின் பெயரால் தொடர்ச்சியாக அரசாங்கமும், அரச திணைக்களங்ளும் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உள்ள காணிகளை கையகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, படைகளிடத்தில் உள்ள காணிகள் விடுவிக்கப்படாமை, வடக்கு, கிழக்கில் படைக்குறைப்புக்கள் செய்யப்படாமை, வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியான படைகளின் பிரசன்னம், படைகளின் மீது தொடர்ச்சியாக காணப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படாமை ஆகியனவும் தொடர்கின்றன.
பொறுப்புக்கூறப்படுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியன அவற்றின் உண்மையான நோக்கங்களிலிருந்து விடுபட்டுச் செயல்படுவதை கவலையுடன் தெரிவிப்பதோடு அவற்றின் நிருவாகத்திற்காக நியமிக்கப்பட்டவர்கள் பொறுப்புக்கூறலைத் தடுக்கும் செயற்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகின்றது.
இலங்கையில் நீடித்துக்கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வாகவோ அல்லது ஆரம்பபுள்ளியாகவோ 13ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை மீண்டும் வலியுறுத்துவதோடு 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் முன்மொழியப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்கலையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்பதை மீண்டும் குறிப்பிட விரும்புகின்றோம்.
தமிழ் மக்களின் தேசம் அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நிராகரிக்கும் வகையில் திலீபனின் நினைவுத்தூபியிலிருந்து கிட்டு பூங்கா வரையில் முன்னெடுக்கப்பட்ட வரலாற்றுப் பேரணியையும் இங்கு குறிப்பிட்டுக் கூறுகின்றோம்.
இதனைவிடவும், மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரால் காணிகள் அபகரிக்கப்படுவதும், காணாலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விவகாரங்கள் கருத்தில் கொள்ளப்படாத நிலைமையும் நீடிக்கின்றது. அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுத்துகின்றோம்.
மேலும் 46/1 தீர்மானமானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக்கூறலை செய்வதற்கானது அல்ல என்பதை அந்த மக்களின் பிரதிநிதிகளாக மீண்டும் சுட்டிக்காட்டுகின்றோம் - என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House