
posted 16th February 2022
ஆழ்வார் ஆலய விழாவில் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்ட நிகழ்வு
வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது , ஐந்து பக்தர்களின் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வல்லிபுர ஆழ்வாரின் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அதன்போது , ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்களில் ஐந்து பேரின் தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளன. அவ்வாறு அறுக்கப்பட்ட ஐந்து தங்கச் சங்கிலிகளும் 8 அரை பவுண் நிறையடைய சுமார் 10 இலட்ச ரூபாய் பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த யானை
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஒதியமலைக் கிராமத்தில் மின்சார வேலியில் சிக்கிய யானை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
குறித்த யானை மின்சார வேலியை தும்பிக்கையால் பிடித்தபடி உயிரிழந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியே யானையின் உயிரைப் பறித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தோட்டத்தின் உரிமையாளரான பெண் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
மாபெரும் போராட்டம் 20ஆம் திகதி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை - 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே போராட்டத்துக்கான அழைப்பை விடுத்தார்.
“வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்து எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமையுடன் ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இலங்கை அரசிடம் தீர்வு கோரி கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நாங்கள் போராடி வருகின்றோம்.
இந்த நிலையில், அன்றைய தினம் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் பேரணி ஒன்றை நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கடந்த காலங்களில் நாங்கள் போராட்டங்களை மேற்கொள்கின்றபோது இருந்த ஒத்துழைப்புக்களை போன்று கிராம மட்ட அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், தமிழ் தேசியத்தை நேசிக்கின்றவர்கள், அரசியல்வாதிகள், அரசியலுக்கு அப்பால் நின்று செயல்படுகின்றவர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
வடக்கு, கிழக்கில் இருக்கின்ற அனைத்து தரப்பினரும் இந்த அழைப்பை ஏற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House