
posted 6th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
யாழ். பல்கலைக்கழகத்தில் தமிழில் சட்ட கல்வி கற்க வாய்ப்பளியுங்கள் - சிறீதரன்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பீடத்தை ஆரம்பிக்கவும், சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்டக் கல்வியைத் தொடர்வதற்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன், வடக்கு - கிழக்கு மாகாண ஆசிரியர்களின் நலன்களுக்காக தேசிய கல்வி நிறுவனத்தின் கிளையை மாங்குளத்தில் நிறுவ வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தனது உரையில்,
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 'கல்வியியல் பீடம்' உருவாக்கப்படவில்லை. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மிக முக்கிய பல்கலைக்கழகமாக உள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையை 'பீடமாக ' உருவாக்குமாறு கடந்த ஆண்டும் வலியுறுத்தினேன். ஆனால், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
தேசிய கல்வி நிறுவகத்தின் கிளையை முல்லைத்தீவு - மாங்குளத்தில் நிறுவுமாறு பலமுறை வலியுறுத்தியுள்ளேன். தற்போதைய பொருளாதார சுமைகளுக்கு மத்தியில் வடக்கு - கிழக்கில் உள்ளவர்கள் தமது துறைசார் நடவடிக்கைகளுக்காக தலைநகருக்கு வருவதால் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். ஆகவே, இந்த கோரிக்கை தொடர்பிலும் கரிசனை கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியில் கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சட்ட பீட மாணவர்கள் தமிழ் மொழியில் சட்ட கல்வியை தொடர வாய்ப்பில்லை. தமது தாய்மொழியில் சட்ட கல்வியை கற்க எதிர்பார்க்கிறார்கள். ஆகவே, அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1988ஆம் ஆண்டு நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்ட பீடத்துக்கு தெரிவானேன். அப்போதைய சூழ்நிலையால் என்னால் சட்ட கல்வியை தொடர முடியவில்லை. சட்டக்கல்வி வாய்ப்பு யாழ். பல்கலைக்கழத்தில் இருந்திருந்தால் நானும் ஒரு சட்டத்தரணியாகி இருப்பேன். ஆகவே, தமிழ் மாணவர்கள் தமது தாய்மொழியில் சட்டத்தை கற்கும் வாய்ப்பை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன், யாழ்ப்பாணம் தீவக பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கடினமான முறையில் தான் சேவையில் ஈடுபடுகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றும் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)