
posted 1st December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மாபியாக்களின் ஆட்டத்தை அடக்க ஜெகத் நிஷாந்த
வட்டிக்கு பணம் வழங்கி சொத்துகளை பறிக்கும் 'மாபியா'க்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன. அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்களோ அல்லது அவர்களால் பாதிக்கப்பட்டவர்களோ என்னிடம் நேரடியாக முறைப்பாடு செய்ய முடியும். இவ்வாறு யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அதீத வட்டி , மீற்றர் வட்டி என்பவற்றுக்கு பெருந்தொகை பணத்தை வழங்கி, அந்தப் பணத்தை வாங்கியவர்கள் மீள செலுத்த முடியாதபோது அவர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் சொத்துகளை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய முறையில் முறைப்பாடுகள் செய்யத் தயங்குவதால் பொலிஸாரால் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் தற்போது 'மீற்றர் வட்டி மாபியா'க்கள் அதிகரித்துள்ளன. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து முறைப்பாடு செய்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் கடன் தொல்லைகளால் உயிர்மாய்த்த பலரின் இறப்புக்கு இந்த மீற்றர் வட்டி மாபியாக்களே காரணம் என உயிரிழந்தவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.