
posted 6th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மதுபோதையில் நீதிமன்றத்துக்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பிணை
பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (04) நீதிமன்றத்துக்குள் வைத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டார்.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலையை சேர்ந்த 33 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரின் சகோதரியின் மகன் மீது வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த இளைஞன் வெளிநாடு செல்வதற்காக நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும் நீதிமன்றத்துக்கு வந்து, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்தார்.
இதன்போது, அவர் வைத்திருந்த திறப்பு ஒன்று கீழே விழுந்து அதிக சத்தம் எழுப்பியது. அருகில் நின்ற நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவர் அங்கு சென்று குனிந்து திறப்பை எடுக்க முற்பட்ட போது, மது வாடை வீசியது.
இதையடுத்து அவரை அழைத்து விசாரித்தபோது அவர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த பருத்தித்துறை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தியபோது, அவரை நேற்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று அவர் நீதிமன்றில் மீண்டும் முற்படுத்தப்பட்டார். மருத்துவ அறிக்கையிலும் அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, அவரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவித்த நீதிவான், 2024 பெப்ரவரி 22ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)