
posted 15th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் நாணய நிதியக் கடன்
கடன் கிடைப்பதை மிக சந்தோஷமாக வரவேற்கும் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படப் போகும் நெருக்கடிகள் தொடர்பில் கவலைப்படவில்லை. மாறாக நாடு மீண்டெழ வேண்டுமாக இருந்தால் குறிக்கப்பட்ட காலம் மக்கள் நெருக்கடிகளை சகித்துக் கொள்ள வேண்டுமென நாட்டை குட்டிச் சுவராக்கி ஊழல் செய்த அரசியல்வாதிகளை காப்பாற்றும் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சாதாரண மக்களை பார்த்து கோரியுள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வற் (VAT) வரி அதிகரிப்பு ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வரும் போது எரிபொருட்களின் விலை அதிகரிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் மேலும் அதிகரிப்பை ஏற்படுத்தும். இதனால் மத்திய, சாதாரண மக்கள் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்நோக்கவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் தொடர்ந்து கிடைப்பதற்கான சூழ்நிலைகள் மேலும் நாட்டின் வரிகள் அதிகரிப்பதற்கும் பல திணைக்களங்கள் தனியார் மயப்படுத்தப்படுவதற்கும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன இவையாவும் நாட்டின் பெரும்பாண்மையாக உள்ள சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாரிய நெருக்கடிக்குள் தள்ளவுள்ளது.
நாட்டின் கடனை மறு சீரமைப்பு செய்யாமல், உள் நாட்டு உற்பத்திகளை அதிகரிக்காது ஊழல்வாதிகளை கண்டறிந்து சூறையாடப்பட்ட பணத்தை நாட்டின் திறைசேரிக்கு கொண்டு வராமல் மேலும் கடன்களை அதிகரித்தல் நாட்டின் மக்களின் வாழ்வாதாரத்தை பாரிய பாதக நிலைமைக்குள் தள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)