
posted 15th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சைவத்தின் சாபத்துக்கு எவரும் ஆளாகாதீர்கள் - ஆறு. திருமுருகன்
கீரிமலையில் ஜனாதிபதி மாளிகையை அண்டியுள்ள சைவ சமய அடையாள இடங்களை விடுவிக்காமல் தனியார் பல்கலைக்கழகம் என்ற பெயரில் வழங்க முற்பட்டால் அதனை பெற்று சைவ சமயத்தின் சாபத்துக்கு ஆளாக எவரும் விரும்பக்கூடாது என்று தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய தலைவர் ஆறு. திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகை நகர அபிவிருத்தி அதிகார சபைக்காக இன்று அளவீடு செய்யப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'யாழ்ப்பாணம் மாவட்டம், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் நகுலேஸ்வரம், காங்கேசன்துறை கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி மகிந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை தமிழ் மக்களின் எதிர்ப்பால் பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தனர். இருப்பினும், அதனை அண்டிய பகுதிகளை தொடர்ந்தும் ஆட்சி செய்யவும், தமக்கான நிதி ஈட்டலைத் தேடவும், தமிழர்களின் குறிப்பாக சைவ சமயத்தவர்களின் எதிர்ப்பை திசை திருப்பும் வகையிலும் அப்பகுதியை ஒரு தமிழரிடம் அதுவும் ஒரு சைவப் பெருமகனாரிடம் முதலீடு என்னும் பெயரில் வழங்கும் சூழ்ச்சி இடம்பெறுவதாகவே நாம் கருதுகின்றோம்.
எனவே, இப்பகுதியில் உள்ள 7 சைவ சின்னங்களும் விடுவிக்க நாம் எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் இதுவரை நிறைவேறாத நிலையில் அப்பகுதிகளைப் பெற்று தொழில் புரிய எவர் முனைந்தாலோ அல்லது உறுதுணை புரிந்தாலோ அது சைவ சமயத்துக்கு செய்யும் பெரும் துரோகமாகவே நாம் பார்க்கின்றோம் எனப் பகிரங்க வெளியில் கூறி வைக்க விரும்புகின்றோம்' என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)