
posted 16th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
அக்குறணை வெள்ளப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாட இணங்கம்
ஜனாதிபதி ஞாயிற்றுக்கிழமை (17) கண்டிக்கு விஜயம் செய்யும் பொழுது அக்குறணை வெள்ளப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அழைப்பு விடுத்தபோது இணங்கியுள்ளதா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில், ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சுக்குக்கான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறியதாவது,
நாட்டின் சீரற்ற கால நிலையினால் ஏற்படும் பாதிப்புகள் பாரதூரமானவை. மத்திய கோட்டுக்கு அருகில் அமைந்திருக்கும் நாடு என்பதனாலும், வெப்ப வலய நாடு என்ற விதத்திலும் இலங்கையில் அடிக்கடி அர்த்தங்கள் ஏற்படுகின்றன. வெள்ளத்தைப் பொறுத்தவரை அக்குறணையில் பிங்கா ஓயா பெருக்கெடுத்து ஓடி அக்குறணை நகரை ஊடறுத்துச் சென்று கட்டுகஸ்தோட்டயில் மகாவலிகங்கையுடன் சங்கமம் ஆகின்றது. பொல்கொல்லை அணைக்கட்டினால் அங்கு மணல்மேடு குவிந்து நீர் வழிந்தோடாமல் தேங்கி பின்னோக்கி தள்ளப்படுகின்றது. என்ற நிலைமை நீண்ட காலமாகவே இருக்கின்றது.
இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுவதைத் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கு இடையிலான குழுவொன்றை நான் பதவி வகித்த அமைச்சு ஒன்றின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் தலைமையில் நியமித்திருந்தோம். பிங்கா ஓயா பெருக்கெடுப்பதற்கான காரணங்களையும், அக்குறணை நகரம் அடிக்கடி வெள்ளநீரில் முழ்குவதற்கான ஏதுக்களையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு விசேட செயலணியும் நியமிக்கப்பட்டிருந்தது.
நான்கு மாதங்களுக்கு முன்னர் அக்குறணை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் நான் இந்தப் பிரச்சினையை எழுப்பி, பிரதேச செயலாளரிடமும் அங்கு வந்திருந்த நகர அபிவிருத்தி அதிகார சபையினருடனும், அனுமதியளிக்கப்படாத கட்டிடங்களை அகற்றுவதற்கு ஏதும் உருப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்று கேட்டேன். அவ்வாறான நடவடிக்கைகள் குறைவாகவே உள்ளன . மேலும் முன்னெடுப்புகள் தேவை.
ஏ9 பிரதான வீதியில் 8ஆம், 9ஆம் மைல் கல்களில் இருந்து, அம்பேதென்ன சந்தி வரை பல்வேறு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டி உள்ளன. அத்துடன் அதற்கு சிவில் குழுக்களின் ஒத்துழைப்பும் தொடர்ந்தும் தேவைப்படுகின்றது. இதற்கு நகர அதிகார அபிவிருத்தி சபை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. நீண்ட காலமாக கையாண்டு வரும் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு இன்னும் தாமதமாகிக் கொண்டே போகின்றது. மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஞாயிற்றுக்கிழமை (16) கண்டிக்கு வரவிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த கூட்டம் முடிவடைந்தவுடன் அக்குறணை மழை வெள்ள பிரச்சினை தொடர்பில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எங்களுடனும், அதனோடு சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளுடனும், முக்கியஸ்தர்களுடனும் சிவில் சமூகத்தினருடனும் கலந்துரையாடி நிலையான தீர்வை நோக்கி எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்பதை ஆராயவிருக்கிறார் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)