
posted 19th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பறங்கியாறு பெருக்கெடுத்ததால் அல்லல்படும் மக்கள்
பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளிப் பிரதேசத் தொடர்புகள் எதுவுமின்றி முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சிராட்டிக்குளம் கிராமம் பாதிப்படைந்துள்ளதுடன் வீடுகளுள் வெள்ளம் மற்றும் ஆற்று நீர் புகுந்தமையால் வீடுகளில்கூட உணவுகளை தயார் செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தப் பகுதியில் வர்த்தக நிலையங்கள் இல்லாத நிலையில், 7, 8 கிலோமீற்றர் தூரமுள்ள நட்டாங்கண்டல் பிரதேசத்துக்கு சென்றே பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் என்றும் தெரிவித்த மக்கள் பறங்கியாறு பெருக்கெடுத்து குடிமனைக்குள்ளாக பாய்வதால் வைத்தியசாலைக்குக்கூட செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
கால்நடைகள்கூட வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளன என்றும் சிலவற்றை இறந்த நிலையில் மீட்டதாகவும் தெரிவித்துள்ள அவர்கள் சிறு குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் நிலையில் வீடுகளில் தண்ணீர் தேங்கி வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய சூழலில் தாம் இருப்பதாக தெரிவித்த அவர்கள், வீடுகளும் இடிந்துவிழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சிராட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவில் 67 குடும்பங்களை சேர்ந்த 197 பேர் வசித்துவருகின்றனர். இந்த நிலையில் குறித்த குடும்பங்கள் வெள்ளத்தால் வெளித்தொடர்புகள் எதுவுமின்றி நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 16ஆம் திகதி வரை மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம், விநாயகபுரம் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)