
posted 11th December 2023
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
நாட்டின் இன்றைய நிலைமையில் 4வது சர்வதேச விமான நிலையம் தேவையா?
நாட்டின் இன்றைய நிலைமையில் 4வது சர்வதேச விமான நிலையம் தேவையா? என பாராளுமன்றத்தில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பினர் அவர் தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்;
என்னை நோக்கி நேற்றைய (09) தினம் ஆளும் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தகாத வார்த்தைகளை வெளிப்படுத்தியிருந்தார். அந்த கேள்விகளை என்னிடம் கேட்பதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் சென்று அவ்வாறான கேள்விகளை கேளுங்கள். ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் கூறிய சில விடயங்களை நான் ஏற்றுக் கொள்கின்றேன். நான் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்த விடயம் அனைவரும் அறிந்ததே.
இவர் ஒரு விஞ்ஞானி போல் இங்கு கருத்து தெரிவிக்கின்றார். நான் கல்வி கற்றது சிங்கள பாடசாலை என தவறான கருத்துக்களை கூறியிருந்தார். கண்டி திருத்துவ பாடசாலை மூவின மக்களும் கல்வி கற்கும் பாடசாலை. எனக்கு சிங்கள நண்பர்கள் மாத்திரம் அல்ல. எனக்கு அனைத்து மொழிகளை பேசும் நண்பர்கள் இருக்கின்றனர். இதை குறையாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறான நபர்கள் கூறும் விடயங்களை சில தமிழ் ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றன. இவ்வாறான போலி விமர்சனங்களே என் வளர்ச்சிக்கு பிரதான காரணம். இன்றும் வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுகின்றனர். நேற்றும் ஐபிசி தமிழ் ஊடகத்தினுடைய மட்டக்களப்பு மாவட்டதிற்கான பிராந்திய செய்தி சேகரிப்பாளர்கள் சிலருக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்தபோது செய்தி சேகரிக்க சென்ற இரு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்றின் முன் முன்னிலையாக வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.
இது தொடர்கிறது. வடக்கு - கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் செயற்பாட்டினை இந்த அரசாங்கம் முன்னெடுக்கிறது. அண்மையில் கூட ''Online Safety Bill'' என்ற ஒரு சட்டமூலத்தை உருவாக்கி அச்சுறுத்தும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்கிறது.
இது தொடருமானால் அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகளும் எதிர்ப்புக்களை மக்களால் அதிகரிக்கப்படும். அரச ஊடகங்களில் கூட வடக்கு - கிழக்கில் தமிழ்மொழி செய்தி சேகரிப்பாளருக்கு ஒரு தொகையும், சிங்கள மொழியில் செய்தி சேகரிப்பாளர்களுக்கு ஒரு தொகையிலும் வழங்கப்படுகிறது. இதுதான் இந்த நாட்டில் உள்ள ஊடக நியதி. மேலும் தென்னிலங்கை ஊடகவியாளர்களுக்கு கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற சலுகைகள் எதுவும், வடக்கு - கிழக்கு ஊடகவியாளர்களுக்கு கிடைக்கவில்லை. மட்டக்களப்பில் கடந்த 10 வருடங்களாக ஒரே தகவல் திணைக்கள அதிகாரியே செயல்படுகிறார். அவர் ஒரு அரச அதிகாரி என்பதற்கு அப்பாற்பட்டு சில செயற்பாடுகளில் ஈடுபடுகிறார். இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் எழுந்துள்ளது.
ஜனாதிபதி தற்போது 4வது சர்வதேச விமான நிலையம் ஒன்றினை திறப்பதற்குப் முயற்சிப்பதாக கூறியுள்ளார். இது தேவையான ஒரு விடயமாக இருப்பினும் அதற்கு முன்னர் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணத்திற்குரிய பலாலி வடக்குப் பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்வதற்கும், விமான ஓடு பாதையினை முறையாக அமைப்பதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். புணரமைப்பு செய்வதற்கு யாழ்ப்பாண விமான நிலையம் காணப்படினும் அதைப் பற்றி சிந்திக்காமல் மற்றுமொரு புதிய விமான நிலையத்தினை அமைப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். வடக்கில் புனரமைப்பு செய்வதற்குரிய இடங்கள் காணப்படினும், எதற்காக புதியனவற்றை அமைக்க வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.
மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற பல்வேறுபட்ட இடங்களிலும் 45 Seater விமானங்கள் தரை இறங்கக் கூடிய வசதிகள் உள்ளன. ஆகவே தனியார் கம்பனிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்ற போது மட்டக்களப்பு – கொழும்பு, கொழும்பு – கனடா, துபாய் போன்ற பல்வேறு நாடுகளுக்கும் விமான சேவைகளை மேற்கொள்ள ஏதுவாக அமையும். ஆகவே மேற்கொள்ள வேண்டிய இது போன்ற விடயங்களை மேற்கொள்ளாமல் 4வது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக பேசுவது நேரத்தினை வீணடிக்கும் ஒரு விடயம். அத்துடன் எங்களது பிரதேசத்தைப் பற்றி கவனம் செலுத்த தவறிவிட்டீர்கள் என்றே நாங்கள் எண்ணக்கூடும். KKS இலிருந்து ஆரம்பித்த பாதையானது 56 கடல் மைல்களாக காணப்படுகின்றது. இதனால் நேரமும், செலவும் அதிகமாக உள்ளது. அதனால் மக்கள் இப் பாதையினைப் பயன்படுத்துவார்களா என்பது தெரியாது. தலைமன்னார் – இராமேஸ்வரம் பாதையானது 18 கடல் மைல்களாக உள்ளதால் 1 மணித்தியாலத்தில் சென்றடையக் கூடியதாகவும், செலவும் குறைவாக உள்ளது. அதனால் மக்கள் கூடதலாக அப் பாதையினை பாவிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. இது தொடர்பாக ஆராய வேண்டும். மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். விரைவில் இப் பாதையினை திறப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அத்துடன் திருகோணமலையிலுள்ள துறைமுகமும் எவ்வித அபிவிருத்தியும் இல்லாமல் உள்ளது. எனவே இதற்கு பொறுப்பான அமைச்சர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)