
posted 15th December 2022
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை மற்றும் யாழ்.மாநகரசபை சமய விவகாரக் குழு ஆகியவற்றின் இணை ஏற்பாட்டிலும் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்றது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்திலே ஆன்மிக அரங்கின் தொடக்க நிகழ்வுகள் புதன்கிழமை (14) காலை 7.30 மணிக்கு குருபூஜை நிகழ்வுகளோடு ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து நாவலர் பெருமானின் வரலாற்றைச் சித்திரிக்கின்ற ஓவியங்களும், நாவலர் பெருமானால் சமூகத்திற்குத் தரப்பட்ட படைப்புகளும் உள்ளடங்கிய கண்காட்சி நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவமும் இடம்பெற்றது.
காலை 8 மணிக்கு நாவலர் பெருமானின் உருவப் படம் தாங்கிய ஊர்வலம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மணிமண்டபத்திலிருந்து நாவலர் வீதியில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபம் நோக்கிப் பவனி வந்தது.
நாவலர் கலாசார மண்டபத்திலே, பெயர்ப் பலகைத் திரை நீக்கத்தினைத் தொடர்ந்து ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானுக்கான குருபூசை நிகழ்வுகளோடு ஆன்மிக அரங்கின் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள், சர்வதேச இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் து.கு. ஜெகதீஸ்வரக் குருக்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அனிருத்தன், யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன், சமயப் பெரியார்கள், கல்விமான்கள், அறநெறிப் பாடசாலைச் சமூகத்தினர்,பல்கலைக்கழக சமூகத்தினர் எனப் பலரும் பங்கெடுத்தனர்.
நாவலர் பெருமானின் குருபூசை நாளான நேற்று நிகழ்வுகள் ஆரம்பமாகி எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இடம்பெற்று நாவலர் பெருமானின் ஜனன தின நாளான 18 ஆம் திகதி மாநாடு நிறைவடையவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)