
posted 18th December 2022
எமது உள்ளுர் வெளியூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும் இவர்களின் ஆக்கங்கள் கொண்ட புத்தகங்களை யாவரும் வாசிக்க வேண்டும் என்ற ஒரு சிந்தனையில் மன்னார் பொது வாசிகசாலையில் இதற்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே, கையடக்க தொலைபேசியில் உள்ள கவனத்தைக் குறைத்து மாணவர்கள், இளைஞர்களை புத்தகங்களை வாசிப்பில் கூடிய கவனம் வேண்டுமென ஊக்குவிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.
கலாபூஷணம் எஸ்.ஏ. மிராண்டா அவர்களால் எழுதிய 'நினைவழியாப் பதிவுகள் சில' தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (17.12.2022) பேசாலையில் இடம்பெற்றபோது இதில் கலந்துகொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தனது உரையில்;
இந்த நூலில், நான் இயலாமையில் இயல்பை காண்கின்றேன். இந்த நூல் ஆசிரியர், தனது ஆசிரியர் பதவியின் காலத்திலும், ஓய்வுபெற்ற பின்னைய காலப்பகுதியிலும் ஆற்றிய சமூகப் பணியையும், சமயப் பணியையும் இன்றுவரை அவரது இயலாமையிலும் தொடர்வதை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
மேலும், முதியோர் எமது சொத்துக்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இளைய தலைமுறையினருக்குச் சென்றடைய வேண்டுமென்பது எம் அனைவரினதும் ஆசையாக இருக்கின்றதை நாம் மறுக்க முடியாது.
இவரது நூலானது அனைத்தையும் அடக்கியுள்ளது. இந்நூலில், முதியோர் எவ்வாறு பாதுக்காக்கப்பட வேண்டும் சிறுவர்களின் உரிமைகள் எவ்வாறு மதிக்கப்பட வேண்டும் தற்பொழுது ஒரு கொடிய நோயாக திகழும் போதைப் பொருளிலிருந்து மக்களை எவ்வாறு பாதகாக்கப்பட வேண்டும் போன்ற பல விடயங்களை இவ் நூல் தாங்கி வெளிவந்துள்ளது.
இப்பொழுது கையடக்க தொலைபேசியில் பலரும் சங்கமித்துள்ளனர். ஆனால் இவற்றில் நாம் மூழ்கி இருந்தாலும் ஒரு புத்தக வாசிப்பைப்போல் அமையமாட்டாது.
எனவே, இவ்வாறான புத்தகமானது வாசிக்கும் தலங்களுக்குச் சென்றடைய வேண்டும். அதற்கென ஒரு ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
கடந்தகால வரலாறுகளை கொண்டுள்ள ஒரு நூலாகவும் எதிர்கால சந்தினருக்கு கடந்தகால பலதரப்பட்ட வரலாறுகளை அறிந்துகொள்ளக் கூடிய ஒரு பொக்கிஷமாக இந்ந்நூல் அமைந்துள்ளது.
ஆகவே, புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு இளைஞர்கள் அனைவரும் அழைக்கப்பட வேண்டுமென அரச அதிபர் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)