மாதாவின் வார்த்தைகள் எமது வாழ்வாகட்டும் - யாழ் ஆயர்
மாதாவின் வார்த்தைகள் எமது வாழ்வாகட்டும் - யாழ் ஆயர்
மாதாவின் வார்த்தைகள் எமது வாழ்வாகட்டும் - யாழ் ஆயர்

யாழ்ப்பாணம் ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் புதுவருட வாழ்த்து செய்தி.

2023ஆவது புதிய ஆண்டு மலருகின்ற வேளை இப்புத்தாண்டைக் கொண்டாடும்
அனைவருக்கும் நீங்கள் உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் இப்புதிய ஆண்டு உங்கள் உள்ளத்து எண்ணங்கள், ஏக்கங்கள் அனைத்தையும் நிறைவு செய்யும் இறை ஆசீர்மிக்க ஆண்டாக அமைய முதலில் வாழ்த்துகிறோம்.

உலகக் கத்தோலிக்க திரு அவையானது ஒவ்வொரு ஆண்டின் முதல் தினத்தையும் தேவ அன்னையின் தினமாகப் பிரகடனப்படுத்தி அன்றைய தினத்தில் அந்த புதிய ஆண்டு முழுவதிற்குமான தேவ அன்னையின் தாய்க்குரிய அன்பையும், பாசமிகு பராமரிப்பையும் வல்லமை மிக்க இறை பாதுகாப்பையும் பெற செபிக்கும்படி பணித்து நிற்கிறது.

’நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’ (லூக்கா1:38)
என்று தேவ அன்னை இறைசித்தத்தை ஏற்று பல இன்ப துன்ப அனுபவங்கள் வழியாக தன் அர்ப்பண வாழ்வை வாழ்ந்து இறைவனின் தாயாகவும், இறை மக்களின் தாயாகவும் விளங்கும் பாக்கியம் பெற்றவர்.
இன்றும் அன்னை மரியாள் உலக மக்கள் அனைவரையும் தன் அன்புப் பிள்ளைகளாக அரவணைத்துப் பாதுகாத்துப் பாரமரித்து வருகிறாள்.

கடந்த 2022ஆம் ஆண்டானது, எம்மைப் பல இன்பமான அனுபவங்கள் வழியாகவுயாகவும், பல துன்பமான அனுபவங்கள் வழியாகவுயாகவும் அழைத்துச் சென்று தன் பயணத்தை முடித்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால், மலர்கின்ற 2023ஆம் புதிய ஆண்டானது எப்படி அமையுமோ என்ற ஏக்கமும், இனியதாய் அமைய வேண்டும் என்ற நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பும் எம் எல்லோர் மனதுகளிலும் நிறையவேஉண்டு.

எனவே, நாம் அனைவரும் 2023ஆம் ஆண்டை தேவ அன்னையின் பாதுகாப்பில் நம்பிக்கை வைத்து தொடங்குவோம். இப்புதிய ஆண்டு முழுவதும் தேவ அன்னை தன் தாய்க்குரிய அன்போடும், பாசத்தோடும் எம்மைப் பாதுகாப்பாள் என்ற நம்பிக்கை உங்கள் மனதில் நிறைந்திருக்கட்டும்.

தேவ தாயை எப்போதும் எங்கிருந்தாலும், என்ன நடந்தாலும் உங்கள் அன்னையாக மனதிலிருத்தி என்ன செய்தாலும் அன்னையின் துணையுடன் செய்யுங்கள். அன்னை வெற்றியையே பெற்றுத் தருவாள்.

இந்த ஆண்டு முழுவதும் என்ன நடந்தாலும்,

’நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்’

என மனதில் அடிக்கடி சொல்லிச் செபியுங்கள். இந்த வார்த்தைகளே இந்த ஆண்டு முழுவதும் உங்கள் அனைவரையும் வழிநடத்தும் வார்த்தைகளாகட்டும்.

இறைவனின் அன்னையும், இறைமக்களின் அன்னையுமான தேவ அன்னை தாய்க்குரிய அன்போடு எம் அனைவரையும் இவ்வாண்டு முழுவதும் எத்தீங்குமின்றி பாதுகாத்து, வழிநடத்தி எம் அனைத்துத் தேவைகளிலும் உடனிருந்து நிறைவு செய்ய இறையாசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது புதுவருட வாழத்தில் தெரிவித்துள்ளார்.

மாதாவின் வார்த்தைகள் எமது வாழ்வாகட்டும் - யாழ் ஆயர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)