
posted 25th December 2022

கிழக்கிலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகைதர்ஹா ஷரீபின் 201 ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவின் ஆரம்ப நிகழ்வில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றும் இந்த ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றபோது அலை, அலையாக முஸ்லிம் மக்கள் திரண்டு, பக்தி பூர்வமாகக் கலந்து கொண்டனர்.
பள்ளி வாசல்கள் சம்மேளனத் தலைவர் டாக்டர். ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
12 தினங்கள் நடைபெறவிருக்கும் கொடியேற்று விழாவின் ஆரம்ப நிகழ்வின் போது பக்கீர் ஜமாஅத்தாரின் விஷேட நிகழ்வுகளுடன் விஷேட துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
கல்முனைப் பிராந்தியத்தில் தமிழ் - முஸ்லிம் நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இந்த கொடியேற்று விழா காலங்களில் கல்முனைப் பொலிஸார் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் முஸ்லிம்கள் இந்த கொடியேற்று விழாவுக்கு வருகை தருவது சிறப்பம்சமாகும்.
இந்த கொடியேற்ற விழாக்காலத்தில் வெள்ளிக்கிழமைகளில் இரவில் இடம்பெறும் பக்கீர் ஜமாஅத்தாரின் வெட்டுக்குத்து பக்தி பூர்வசாகசங்கள், ராத்தீபு நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கவையாகும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)