
posted 22nd December 2022

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அம்மாச்சி என்ற பாரம்பரிய உணவகம் மூடப்பட்டு காணப்படுவதால் பாரம்பரிய உணவு உண்போர் அசௌரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கவலை தெரிவிக்கிறனர். அத்துடன் இவ் உணவகத்தை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை விவசாய பணிப்பாளர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளி மாவட்டங்களிலிருந்து மன்னார் பகுதிக்கு வருவோருக்காகவும் மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் பாரம்பரிய உணவு வகைகளை உண்டு மகிழவும் 2018 ஆம் ஆண்டு முருங்கன் பிரதான வீதியில் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகம் விவசாய திணைக்கப் பகுதியால் திறந்துவைக்கப்பட்டிருந்தது.
இவ் உணவகம் திறக்கப்பட்டமையால் பெண்கள் தலைமைத்துவம் கொண்டவர்களும் மற்றும் வறுமை கோட்டுக்குள் வாழ்ந்த குடும்ப பெண்களும் வருமானம் ஈட்டுவதற்கு இவ் உணவகம் விளங்கி காணப்பட்டதுடன் குறைந்த விலையில் பாரம்பரிய உணவு வகைகளை பெறக்கூடியதாக பலருக்கு பெரும் பிரயோசனமாக காணப்பட்டதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் கொவிட் தொற்று நோய் காலப்பகுதியில் இவ் அம்மாச்சி உணவகம் மூடப்பட்டபின் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர்ந்து மூடப்பட்டு காணப்படுவதால் இப் பகுதியிலும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோரும் பாரம்பரிய உணவுகளை பெறுவதில் அசௌரியங்களை நோக்குவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளிடம் வினவிய போது தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு முருங்கன் பகுதி அம்மாச்சி உணவகம் மீண்டும் புதுப் பொலிவுடன் பாரம்பரிய உணவகமாக இயங்க உள்ளது எனவும்,
அம்மாச்சி உணவகத்துடன் இணைந்து பயணிப்பதற்கு சமையல் மற்றும் வியாபாரம் செய்வதில் ஆர்வம் உள்ள அமைப்புகளைச் சார்ந்தவர்களும் மற்றும் தனிப்பட்ட பெண்களிடமும் இருந்து விண்ணப்பங்களை கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரும்பியோர் முருங்கன் விவசாய போதனாசிரியர் அலுவலகம்:
0772911198 , 0765459436 பிரதிமாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் உயிலங்குளம் 0776614703 , 0776640526 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படியும் வேண்டப்பட்டுள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)