பலவகைச் செய்தித் துணுக்குகள் - 06.12.2022
பலவகைச் செய்தித் துணுக்குகள் - 06.12.2022

தடம்புரண்ட சொகுசு பஸ்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பேருந்து கிளிநொச்சியில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானதில் 22 பேர் படுகாயம் மற்றும் காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்தச் சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் இரணைமடு சந்திக்கு அண்மையாக இடம்பெற்றுள்ளது.

இறந்து கிடந்த மாட்டின் மீது பேருந்து ஏறியதாலேயே தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் - காயமடைந்த 22 பேரும் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேரக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



சகாப்தங்கள் தாண்டின - காணாமல் ஆக்கப்பட்டோரைக் காணாது குரல்கள் ஏன் மௌனித்தன?

25 வருடங்களாக கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்காக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசாங்கத்திடமும், சர்வதேசத்திடமும் பேச வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டோர் பாதுகாவலர் சங்கம் என்ற அமைப்பின் பிரதிநிதி நேற்று முன்தினம் (04) நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1996 ஆம் ஆண்டு சர்வோதய இயக்கத்தில் எனது சகோதரன் பணியாற்றியபோது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். அவரைப் போல 600 பேர் வரை கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். இதற்காக கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் பாதுகாவலர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டோம்.

1997ஆம் ஆண்டில் அப்போது இருந்த ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினோம். ஆறு மாதங்களுக்குள் தீர்வு தருவதாகக் கூறியிருந்தார். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. 1999ஆம் ஆண்டு பலாலி படைத் தளத்தில் இடம்பெற்ற செய்மதி கலந்துரையாடலில் ஜனாதிபதியுடன் பேசியும் பலன் கிடைக்கவில்லை. சாத்வீகமாக பல்வேறு வழிகளிலும் நாம் அப்பாவி இளைஞர்கள் மற்றும் சகோதரர்களின் விடுதலைக்காக போராடினோம்.

கடந்த இருபது வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி கல்வி பொருளாதாரம் என பலவற்றிலும் நலிவுற்று போனோம். எத்தனையோ ஆணைக் குழுக்களுக்கு முன்னாள் எமது சாட்சியங்களை வழங்கி இருந்தோம். நாம் அரசுக்கு எதிராக எவ்வித வன்முறையிலும் ஈடுபடவில்லை. சாத்வீகமாகவே எமது பிள்ளைகள் சகோதரர்களுக்கு என்ன நடந்தது என்பதை கோருகிறோம்.

எங்களுக்கு 20 வருடங்களுக்கு மேலாக ஏற்பட்ட ஏமாற்றம், சலிப்பு போன்றவற்றினால் தற்போது எவ்வித போராட்டங்களிலும் நாம் பங்கேற்பது கிடையாது. எமது நிலைமை தொடர்பாகவோ எமது பிரச்னைகள் தொடர்பாகவோ தமிழ் கட்சிகள் எதுவுமே பேசுவதும் கிடையாது. யுத்தத்துக்கு பின்னர் அல்ல. 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் 25 வருடங்களாக நாம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராடி வருகின்றோம். இதனை கருத்தில்கொண்டு தமிழ் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.



வரவு-செலவுத் திட்டம் - 2023

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் எட்டு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கான விசேட கூட்டம் இன்று (06) செவ்வாய்க் கிழமை சபையின் தவிசாளர் ந. கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

பலத்த விவாதத்துக்கு பின்னர் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தியால் வாக்கெடுப்புக்கு கோரப்பட்டபோது இலங்கை தமிழரசுக் கட்சியின் எட்டு உறுப்பினர்களும் வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 உறுப்பினர்களும், எதிராக ஒரு உறுப்பினரும் ஒரு உறுப்பினர் நடுநிலைமையையும் வகித்திருந்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினர் என 9 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் எதிர்த்து வாக்களித்ததுடன் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர் நேற்றைய கூட்டத்திற்கு வருகை தரவில்லை.


பலவகைச் செய்தித் துணுக்குகள் - 06.12.2022

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)