
posted 31st December 2022

வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிரந்தர அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்படும் வரை பயிர்ச்செய்கையை காரணம் காட்டி நிலங்களை கையகப்படுத்தல் மற்றும் அரச திணைக்களங்கள் மூலமாக நிலத்தை அபகரிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டுமென வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ் வேண்டுகோளில்;
ஐனாதிபதி ரணில் அரசாங்கம் பயிர் செய்கை பண்ணப்படாத நிலங்களை அரச உடைமையாக கையகப்படுத்தும் புதிய வடிவிலான நில அபகரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது
அதன் முதற் கட்டமாக வடக்கு மாகாணம் உற்பட்ட பதுளை, குருணாகல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
வடக்கு கிழக்கு மாகாணங்களை பொறுத்த வரையில் கடந்த 30 ஆண்டு போர் காரணமாக லட்சக் கணக்கான தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு தேசங்களில் வசிப்பதால் அவர்களுக்கு சொந்தமான பெரும் தொகையான பயிர்ச்செய்கை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளன.
அதனை அவர்கள் பயன்படுத்த ஒரு நிலையான அரசியல் தீர்வு மிக அவசியமானது..
ஆகவே, இனப் பிரச்சினைக்கான தீர்வுவை முன்னெடுப்பதை தவிர்த்து நிலத்தை கையகப்படுத்தல் புதிய வடிவிலான இன அழிப்பாகவே மாறியுள்ளது.
இத்தகைய செயற்பாடுகளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
வவுனியா, மன்னார் மாவட்டங்களில் 14,000 ஏக்கர் காணி அபகரிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும்..
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிரந்தர அரசியல் தீர்வு உறுதிப்படுத்தப்படும் வரை பயிர்ச்செய்கை நிலங்களை கையகப்படுத்தல் மற்றும் அரச திணைக்களங்கள் மூலமாக நிலத்தை அபகரிக்கும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
அத்தோடு வடக்கு கிழக்கில் மாகாணத்திற்கு சொந்தமான அரச காணிகள் வடகிழக்கில் வாழும் மக்களில் சொந்தக் காணி இல்லாதவர்களுக்கும் தொழில் வாய்ப்பு இல்லாது ஆயிரக்கணக்காக தொழில் தேடி அலையும் இளையோருக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவரின் வேண்கோளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)