
posted 18th December 2022
கலாபூஷணம் எஸ்.ஏ.மிராண்டா அவர்கள் புத்தகத்தில் மாத்திரமல்ல தனக்குள்ளே ஆன்மீக தாகத்துடன் இருப்பதுடன் ஆலய செப வழிபாடுகளிலே மற்றவர்களுக்காக செபிப்பதையும் கல்வி கலை கலாச்சாரத்தை பேணி சமூகத்தின் மத்தியில் முன்னெடுப்பதில் ஈடுபாடு கொண்டவராக இருப்பதை நான் இவரிடம் நோக்கியுள்ளேன் என புகழாரம் சூட்டினார் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவரும் பேசாலை பங்குத் தந்தையுமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார்.
பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய மண்டபத்தில் பத்திமா கழகத்தினால் கலாபூஷணம் எஸ்.ஏ.மிராண்டா அவர்களால் ஆக்கம் செய்யப்பட்ட புத்திக வெளியீட்டு விழாவில் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவரும் பேசாலை பங்குத் தந்தையுமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இங்கு உரையாற்றுகையில்;
'நினைவழியாப் பதிவுகள் சில' என்ற நூல் ஆசிரியரான் கலாபூஷணம் எஸ். ஏ. மிராண்டா அவர்களின் இது ஐந்தாவது வெளியீடு. இந்த புத்தக ஆக்கத்துக்கு இந்த நூல் ஆசிரியர் அதிகமான நேரத்தையும் சக்தியையும் செலவழித்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இந்த புத்தகத்தை நோக்கும் போது இது சமய முயற்சியாகவும், சுய முயற்சியாகவும் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. அதாவது விசுவாசத்தின் செயல்பாடாகவும் சமூக நோக்குடனும் இது வெளிப்பாடாகவும் இருக்கின்றது.
இவர் பேசாலை பங்கின் ஒரு மூத்த உறுப்பினராக இருப்பதால் பல வருடங்களின் தொகுப்பை அவர் தொகுத்துள்ளார். இந்த புத்தகத்தில் கல்வி கலை கலாச்சாரம் விசுவாசம் இன்னும் பல உள்ளடக்ககப்பட்ட விடயங்களை பதிவு செய்துள்ளார்.
இவர் ஒரு பண்பானவர் தனித்துவமானவர் பேசாலையை ஒரு ஒருங்கிணைப்பவராக காணப்படுவதையும் நோக்கக்கூடியதாக இருக்கின்றது.
இவர் இந்த புத்தகத்தில் ஒரு வெட்டுப் பேச்சாக அல்ல பல ஆதராங்களோடு உயிர் துடிப்பாக தந்துள்ளார்.
இந்த புத்தக ஆக்கத்தில் ஆன்மீகம் தென்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
புத்தகத்தில் மாத்திரமல்ல தனக்குள்ளே ஆன்மீக தாகத்துடன் இருப்பதுடன் ஆலய செப வழிபாடுகளிலே மற்றவர்களுக்காக செபிப்பதையும் நான் இவரிடம் நோக்கியுள்ளேன்.
இந்த புத்தகத்தை பார்க்கின்றபோது இவருடைய அர்ப்பணம் மேலோங்கி காணப்படுகின்றது என பேசாலை பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)