
posted 27th December 2022

மிக நீண்ட காலமாக சுனாமியினால் பாதிப்புகளுக்கு உள்ளாகிய மக்களுக்கும் இலங்கை வாழ் மக்களில் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நாட்டில் பல பாகங்களிலும் வாழும் மக்களுக்கு வாழ்வாதாரம் குறிப்பாக பெற்றோரை இழந்த மிகவும் வறுமை கோட்டுக்குள் வாழும் மாணவர்களின் கல்விக்கு அருட்தந்தையர்கள் ஊடாகவும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் மூலமாகவும் உதவிக்கரம் நீட்டிவந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அமரர் திரு கிறீற் டிவுஸ் அவர்கள் கடந்த 17.12.2022 அன்று தனது நாட்டில் இறைபாதம் அடைந்துள்ளார்.
இவரின் மறைவையொட்டி மன்னார் மாவட்ட துயர் துடைப்புச் மறுவாழ்வுச் சங்க அலுவலக மண்டபத்தில் இச் சங்கத்தின் தலைவாரும் எழுத்தூர் பங்கு தந்தையுமான அருட்பணி ரி. நவரட்ணம் அடிகளார் தலைமையில் செவ்வாய் கிழமை (27.12.2022) இரங்கல் கூட்டம் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் மன்னார் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் ஸ்தாபகரும் தற்பொழுது இச் சங்கத்தின் ஆலோகசருமானவரும் முன்னாள் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வருமான அருட்பணி ஏ. சேவியர் குரூஸ் அடிகளார் . முன்னாள் வாழ்வோதய இயக்குனரும், மன்னார் மறைமாவட்டத்தின் சிரேஷ்ட பிரஜைகளின் சமாஜ இயக்குனராகவும் திகழ்ந்த அருட்பணி அல்பன் இராஜநாயகம் (ஓஎம்ஐ) அடிகளார் உட்பட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அமரர் திரு கிறீற் டிவுஸ் அவர்களின் உதவிகள் பெற்ற மாணவர்கள் ம.து.து.ம.வாழ்வுச் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் இவ் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவ்வேளையில் அருட்பணி அல்பன் இராஜநாயகம் (ஓஎம்ஐ) அடிகளாரால் அமரர் கிறீற் டிவுஸ் அவர்களின் உருவப் படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கலந்து கொண்டவர்கள் மெழுகுதிரி ஏற்றி தங்கள் அஞ்சலிகளை செலுத்தினர்.
அத்துடன் இவரிடம் உதவிகள் பெற்றோர் மாணவர்கள் உட்பட பலர் அஞ்சலி உரைகளையும் ஆற்றினர்.
2000ஆம் ஆண்டு தொடக்கம் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தினூடாக வருடந்தோறும் பாடசாலையில் இடைநிலை கல்வி மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இவரின் உதவிகள் பலருக்கு கிடைக்கப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)