
posted 6th December 2022
கிழக்கிலங்கையின் முக்கிய வர்த்தக மாநாகரமான, கல்முனை மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு (வரவு செலவுத் திட்டம்) விரைவில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையில், இலங்கை தமிழரசுக்கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் தோடம்பழ சுயேச்சைக்குழு உட்பட பலகட்சி உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி டிசம்பர் குறித்த 2023 பாதீட்டை சமர்ப்பித்து அங்கீகரிப்பதற்கான விசேட சபை அமர்வு மேயர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.
இந்த விசேட அமர்வில் மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி றகீப் 2023 ஆம் வருடத்திற்கான பாதீட்டை சபையினரின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பார்.
இலங்கையில் நீடிக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவடைந்து எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறலானமென எதிர்பார்க்கப்படும் நிலையில், முக்கிய சபையான கல்முனை மாநகர சபையின் இந்த பாதீடு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறுமென எதிர்பாரக்கப்படுகின்றது.
ஏற்கனவே கிழக்கில் பல உள்ளுராட்சி மன்றங்களின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடுகள் நிறைவேற்றப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)