ஒருமித்த முடிவுதான், தனிப்பட்டதல்ல - சுமிந்திரன்

தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுவது குறித்து , பங்காளி கட்சியுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாக பேசித்தான் முடிவு எடுப்போமே தவிர தனித்து தீர்மானத்தை எடுப்போம் என கூறவில்லை என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (11) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இல்லாமல் , தனித்தனியாக தேர்தல்களை எதிர்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனிடம் கேட்டபோதே அவ்வாறு இவ்வாறு கூறினார்.

தேனாரம் துயர் பகிரும் இணையத்தளம்

அவர் மேலும் தெரிவிக்கையில்;

தமிழரசுக் கட்சி தனியாக போட்டிடுவது என்பது, தமிழரசுக் கட்சியின் தனி முடிவல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்துதான் இந்த முடிவை எடுக்க உள்ளோம்.

தற்போது உள்ள தேர்தல் முறையின் அடிப்படையில் நாங்கள் போட்டியிடுவோமாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற மூன்று கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதாக இருந்தால் கூடுதலான ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு உள்ளது.

சில சபைகளில் அவ்வாறு போட்டிடுவதால் ஆசனங்கள் கூடும் எனக் கூற முடியாது. ஆனால் சில இடங்களில் கூடலாம். சில இடங்களில் குறையலாம். நாங்கள் பலமாக இருக்கின்ற பிரதேசங்களில் போட்டியிட்டால், எல்லா வட்டாரத்தையும் ஒரே கட்சி வெல்லுமாக இருந்தால் மட்டுமே விகிதாசாரத்தில் வருகின்ற ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரே கட்சியாகப் போட்டியிட்டால் வட்டாரங்களில் கூடுதலாக வென்றால் விகிதாசார முறையில் நமக்கு ஆசனங்கள் கிடைக்காது.

இந்த கணக்கை அடிப்படையாக வைத்துத் தான் ஒரு தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் இதனை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றோம். இது சம்பந்தமாக பங்காளிக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதனுடனும், சித்தார்த்தனுடனும் பேசியிருக்கின்றேன். எனவே அவர்களுடன் பேசித்தான் இந்த நாங்கள் விடயத்தை அறிவித்திருந்தோம்.

ஆனால் நாங்கள் இறுதி முடிவெடுக்கவில்லை. ஒவ்வொரு பிரதேசத்திலும், ஒவ்வொரு சபையிலும் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை வைத்து நாங்கள் அந்த முடிவை எடுப்போம்.

சில வேளைகளில் சில இடங்களில் சேர்ந்து போட்டியிடலாம். சில இடங்களில் தனித்தனியே போட்டியிடலாம். எனவே அந்தந்த சூழ்நிலைக்கேற்றவாறு தொழில்துறை ரீதியாக அந்த தீர்மானங்கள் எடுக்கப்படும்.

பங்காளி கட்சியுடன் இணைந்து அவர்களுடன் சமரசமாக பேசித்தான் இந்த முடிவின் எடுப்போமே தவிர நாங்கள் தமிழரசுக் கட்சி தனித்து தீர்மானத்தை எடுப்போம் என கூறவில்லை என்றார்.

ஒருமித்த முடிவுதான், தனிப்பட்டதல்ல - சுமிந்திரன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)