
posted 19th December 2022
தேர்தல் திணைக்களத்தினால் அண்மையில் புதிதாகப் பதிவு செய்யப்பட்ட ஐக்கிய காங்கிரஸ் கட்சி உள்ளுராட்சி மன்ற வட்டாரங்கள் தொடர்பிலான எல்லைப் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கவுள்ளது.
இதற்கு ஏதுவாகத் தமது பிரதேசங்களிலுள்ள எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளையும், தீர்வுகளையும் கட்சிக்கு அறியத்தருமாறு சமூக நிறுவனங்களையும், அரசியல் வாதிகளையும் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் கோரியுள்ளார்.
இவ்வாறு பெறப்படும் முன்மொழிவுகளை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழுவிடம் கட்சிசார்பில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய கமிட்டி எதிர் வரும் 20ந் திகதி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளுடனான சந்திப்பு ஒன்றை கொழும்பில் நடாத்தவுள்ளது.
இதில் கலந்து கொள்ளும்படி ஐக்கிய காங்கிரஸ் கட்சி செயலாளருக்கு எல்லை நிர்ணய குழு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமது பிரதேசங்களில் உள்ள எல்லைப் பிரச்சினைகளையும், தீர்வுகளையும், அரசியல் வாதிகளும், சமூக நிறுவனங்களும் எமது கட்சிக்கு அறிவித்தால் அது பற்றிய ஆவணத்தை மேற்படி சந்திப்பில் எல்லை நிர்ணய குழுவிடம் நாம் ஒப்படைக்க முடியும் என கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)