அம்பாறை மாவட்டத்தையும் உட்படுத்துக
அம்பாறை மாவட்டத்தையும் உட்படுத்துக

அரசாங்கம் வழங்கவிருக்கும் விவசாயிகளுக்கான உதவுத்தொகைகள், இலங்கையின் முக்கிய விவசாய மாவட்டமானதும், மிக அதிகவிவசாய காணிகளைக் கொண்டதுமான அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கும் கிடைக்க ஆவன செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு, ஐக்கிய காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய காங்கிரஸ் கட்சிசார்பில் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் இக்கோரிக்கையை விடுத்துள்ளதுடன்;

இத்தகைய விவசாயிகளுக்கான உதவிகள் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு இதுவரையும் கிடைக்காமை இந்த மாவட்ட முஸ்லிம் சோம்பேறி பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாகவுள்ளமைதான் காரணமாக இருக்கலாமெனவும் விசனம் தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வோம்

இது தொடர்பாக தலைவர் முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவு அரசாங்கம் விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கி வருகிறது.

இது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மற்றுமொரு வெற்றியாகும். விவசாயிகளுக்கான உர விநியோகத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தடை செய்ததன் மூலம் பாரிய தவறை செய்திருந்தார். இது பிழையான முடிவு என்று அப்போதே நாம் பகிரங்கமாக சுட்டிக் காட்டினோம்.

இப்போது நாடு முழுவதும் யூரியா உரம் தாராளமாக கிடைக்கிறது. அத்துடன் நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கவுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் வழங்கவுள்ள இந்த உதவித் தொகை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாதாந்த வருமானம் 41,500 ரூபாவுக்கும் குறைவான விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இந்தத் தொகை ஜனவரி மாதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச். எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியானது, நாட்டிலுள்ள 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு 08 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டின் விவசாயிகளுக்கு வேறு எந்த பயிர்ச்செய்கை காலத்திலும் இவ்வளவு நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் தெரிய வருகிறது.

ஆனாலும் இந்த உதவிகள் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. காரணம் அம்பாறை மாவட்டத்தில்தான் முஸ்லிம் சோம்பேறி எம்பிமார் பலர் உள்ளதாக இருக்கலாம் என்பதாலோ தெரியவில்லை.

மிக அதிக விவசாய பூமியை கொண்ட அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கும் மேற்படி உதவிகள் கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொள்கிறது.

அம்பாறை மாவட்டத்தையும் உட்படுத்துக

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)