
posted 21st December 2022
யாழ்ப்பாணம் மாநகர சபையின் பொது நூலகத்தில் மேலதிகமாக உள்ள புதிய புத்தகங்களை வட மாகாணம் முழுவதும் நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு செவ்வாய் (20) மாநகர சபை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். மாநகர சபை பொது நுலகத்தில் காணப்படும் மேலதிகமான புதிய புத்தகங்களை ஏனைய நூலகங்களின் பயன்பாட்டுக்கு வழங்குவது தொடர்பான பிரேரணை யாழ். மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணனால் முன்மொழியப்பபட்டு அது உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந் நிலையில், அந்த செயல்திட்டத்தின் முதற்கட்டமாக 17 பாடசாலை நூலகங்கள் மற்றும் 14 பிரதேச சபைகளுக்கு உரிய 31 நூலகங்களுக்கு நேற்று (20) 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனால் வழங்கப்பட்டது.
இதன்போது, “எதிர்வரும் காலங்களிலும் புத்தகங்கள் தேவைப்படும் நூலகங்கள் அதற்கான கோரிக்கை கடிதங்களை வழங்கும் பட்சத்தில் அந்த நூலகங்களுக்கும் புத்தகங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாநகர முதல்வர் உறுதியளித்தார்.
யாழ். பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் மற்றும் மாநகர ஆணையாளர் இ. த. ஜெயசீலன் பொது நூலக பிரதம நூலகர், பாடசாலை, பிரதேச சபைகளின் நூலகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)