
posted 24th December 2022

கணவன் விவாகரத்திற்குக் காரணம்
தாம்பத்திய உறவில் ஈடுபட 26 வருடங்களாக மனைவி அனுமதிக்கவில்லை என்று தெரிவித்து, கணவன் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் இந்த விவகாரத்து வழக்கு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இடம்பெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 28, 25 வயதான அவர்கள் தற்போது பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இளைய மகன் பிறந்த பின்னர், மனைவிக்கும் தனக்குமிடையில் தாம்பத்திய உறவு இல்லை என்றும், மனைவி அதற்கு இடமளிக்கவில்லை எனவும் கூறிய கணவர், மகன்கள் வளர்ந்து வேலைக்கு செல்லும் வரை காத்திருந்ததாகவும், தற்போது அந்த சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த தம்பதியருக்கு உளநல ஆலோசனை வழங்குமாறு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

கொலை செய்யப்பட்ட வியாபாரி
முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் சிறுவியாபார நிலையத்தை நடத்தி வந்த ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார் என்று மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் வணிக நிலையத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவத்தில் 68 வயதுடைய அமிர்தலிங்கம் தனபாலசிங்கம் என்பவரே கொலையானார். சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பிரோத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார் என்பது தெரிய வந்தது.
சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் அழைக்கப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.
படகுகள் தீமூட்டப்பட்டன
கொழும்புத்துறை - உதயபுரம் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் படகுக்கு தீ வைத்து எரியூட்டப்பட்டது.
நேற்று முன்தினம் வியாழன் (22) இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் படகுக்கு தீ வைத்ததுடன் மீன்பிடி உபகரணங்களையும் வாளால் வெட்டி சேதப்படுத்தியிருந்தனர்.
சேதப்படுத்திய காட்சி அங்கு வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகனம் மோதி முதியவர் கொலை
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் கோப்பாய் கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று வெள்ளி (23) இடம்பெற்ற வாகன விபத்தில் 68 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ், பாதையின் குறுக்கே சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான அவரை யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போதும் அவர் உயிரிழந்தார்.
நீர்வேலியை சேர்ந்த முதியவரை இவ்வாறு உயிரிழந்தார் என்று அறிய வருகிறது.
விபத்துக் குறித்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)