
posted 12th December 2022
கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் மூலம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது குற்றம் காணப்பட்டதாக வடக்கு சுகாதார செயலாளர் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடித மூலம் அறிவித்ததைத் தொடர்ந்து இடமாற்றப்பட்ட வைத்தியர் சரவணபவன் மீண்டும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்குரிய ஆரம்ப விசாரணைகள் இன்னமும் முடிவடையவில்லை என மத்திய சுகாதார அமைச்சுக்கு மாகாண உயரதிகாரிகள் எழுத்து மூலமாக அறிவித்ததை அடுத்து இந்த மீள் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ் விசாரணைகள் தொடர்பாக ஆரம்ப புலனாய்வு மெற்கொள்வதற்காக கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் வி. கலைச்செல்வனை தலைவராாவும், கிளிநொச்சி சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளர் த. ஆரணி மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ச. பிரசாத் ஆகிய இருவரையும் உறுப்பினராகவும் கொண்ட மூவரடங்கிய விசாரணைக் குழு தமது விசாரணை அறிக்கையில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர், அதன் முன்னாள் கணக்காளர், மற்றும் மூன்று உத்தியோகத்தர்களும் மீதும் குற்றம் புரிந்துள்ளதனை இனம் கண்டுள்ளதாக தமது அறிக்கையைச் சமர்பித்திருந்தனர்.
இந்த நிலையில் கணக்காளர் ஏற்கனவே இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் ஏனைய உத்தியோகத்தர்களில் இருவர் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் பெற்று சென்றுவிட்ட நிலையில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் விசாரணைகள் நிறைவுபெறும் தற்காலிக இணைப்பு வழங்கப்பட்டிருந்தது.
இத் தற்காலிக இணைப்பு இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் அவர் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)