
posted 12th December 2022
கொழும்பு மாநகரசபை சண்டிலிப்பாய் வலி-தென்மேற்கு பிரதேச சபையின் பாவனைக்கென 7 கழிவகற்றும் வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
தென்பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் வலி-தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கடந்த வருட இறுதியில் கொழும்பு மாநகர சபைக்கான நட்புறவு பயணத்தை மேற்கொண்டனர்.
அதன் விளைவாக இவ் வருட ஆரம்பத்தில் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்க தலைமையில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது வழங்கிய வாக்குறுதியின்படி, கொழும்பு மாநகர சபையில் காணப்பட்ட, மீள் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் இருந்த ஏழு வாகனங்கள் கொழும்பு மாநகர சபையால் உரிய அனுமதிகள் பெறப்பட்டு திருத்தப்பட்டு, கொழும்பு மாநகர சபையின் அழைப்பின் பேரில் அங்கு விஜயம் செய்த வலி-தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையிலான உறுப்பினர் குழாமிடம் உத்தியோக பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)