
posted 20th December 2022
இலங்கை துறைமுக அதிகாரசபை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை ஆகியன இணைந்து 02 பில்லியன் ரூபாவை அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.
இதற்கான காசோலை திங்கள் கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
அதற்கமைய இலங்கை துறைமுக அதிகாரசபை 01 பில்லியன் ரூபாவையும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் 500 மில்லியன் ரூபாவையும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை 500 மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்தக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.
துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன, துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர, இலங்கை துறைமக அதிகார சபையின் தலைவர் கீத் டி பெர்னார்ட், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜ.ஏ. சந்திரசிறி, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பி.ஏ. ஜயகாந்த உள்ளிட்ட பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)