
posted 17th December 2021
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா அவர்கள் புதன்கிழமை (15) பிற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்தார்.
குறித்த சந்திப்பின்போது இலங்கையில் செயற்படுத்தப்படும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
'இலங்கையில் மிகச்சிறந்த தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் காணப்படுகிறது' என விக்னராஜா அவர்கள் குறிப்பிட்டார்.
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ள பல நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதாக இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை தற்போது மீண்டும் படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்திருப்பதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
கொவிட் தொற்று நிலைமை காரணமாக உலகளாவிய ரீதியில் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
தடுப்பூசி ஏற்றல் செயற்பாடுகளின் ஊடாக சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிக்கும் என தான் எதிர்பார்ப்பதாக விக்னராஜா அவர்கள் நம்பிக்கை வெளியிட்டார்.
கொவிட்-19 தொற்று நிலைமைக்கு பின்னரான பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடிய திருமதி.விக்னராஜா அவர்கள், இலங்கைக்கு உதவுவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு பல வழிகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அது எதிர்காலத்திலும் தொடரும் என தெரிவித்தார்.
குறிப்பாக தனியார் துறையில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதன் அவசியம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு இளைஞர் யுவதிகளை ஊக்குவிப்பதன் அவசியம் என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
விக்னராஜா அவர்கள் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (யுஎன்டிபி)) உதவி நிர்வாகியாகவும் அதன் ஆசிய பசுபிக் பிராந்திய பணியகத்தின் பிராந்திய பணிப்பாளராகவும் விளங்குகிறார். அதற்கமைய காலநிலை மாற்றம் மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய துறைகளில் ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே இலங்கைக்கு உதவி வருவதாக அவர் கௌரவ பிரதமரிடம் தெரிவித்தார்.
இலங்கையில் யுஎன்டிபி ஆதரவு பெற்ற முக்கிய திட்டங்களில் ஒன்று தற்போது ஏழு ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள காலநிலைக்கு ஒத்த ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவ திட்டம் (சிஆர்ஐடபிள்யூஎம்பி) 'இலங்கையின் வறண்ட வலயத்தில் விவசாயிகளின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டமாகும்.
இலங்கையின் நிலையான அபிவிருத்தி சபையின் (எஸ்டீசீ) ஒத்துழைப்புடன் நிலையான அபிவிருத்தி இலக்குகளை (எஸ்டீஜூஎஸ்) அடைவதற்காக முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் யுஎன்டீபி இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி றொபர்ட் ஜுகாம் அவர்கள் இதன்போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு விளக்கமளித்தார்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House