
posted 19th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
வீட்டிலிருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது சிறுவன்
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுவனை கடத்தல்காரன் ஒருவர் கடத்தி, காட்டுக்குள் கொண்டு சென்றதையடுத்து, சிறுவனை மீட்டு, கடத்திய நபரை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (17) சனிக்கிழமை அதிகாலை மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதாகவும் கைதான நபரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன், தாய், தந்தையுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, அதிகாலை 3. 30 மணியளவில் சிறுவன் பால் கேட்க, சிறுவனின் தாயார் தந்தைக்கு பக்கத்தில் சிறுவனை விட்டுவிட்டு சமையலறைக்குச் சென்றுள்ளார். பின்னர், பால் போத்துலுடன் திரும்பி வந்து பார்த்தபோது சிறுவனை காணாத நிலையில், அந்தப் பகுதி மக்கள் ஒன்று திரண்டு சிறுவனை தேடியுள்ளனர்.
இதன்போது சிறுவனை கடத்திக்கொண்டு நபரொருவர் காட்டுப் பகுதிக்கு செல்வதை கண்ட மக்கள் காட்டை சுற்றித் தேடியுள்ளனர். இந்த நிலையில், சிறுவனை காட்டில் விட்டுவிட்டு சந்தேக நபர் அந்தப் பகுதியில் ஒளிந்திருந்தபோது, அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் சிறுவனையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்த நபர் வாழைச்சேனை செம்மண் ஓடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்றும், போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர் ஏற்கனவே பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும், பதிவு செய்யப்பட்ட குற்றவாளிப் பட்டியலில் (ஐ. ஆர். சி) சேர்க்கப்பட்டவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணத்துக்காக சிறுவனை கடத்திப் பணம் பறிக்க முயற்சித்துள்ளதாகவும் சந்தேக நபர் தொடர்பான பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)