
posted 23rd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இடையே கைகலப்பு
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்துடன் தொடர்புடையவராக கருதப்படும் கட்சியின் பாலமுனை பிரதேச அமைப்பாளர் ஏ. எல். எம். அலியார், கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் உயர்பீட உறுப்பினர் பதவிகளில் இருந்து இரு வார காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடந்த 11 ஆம் திகதி அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு சக்கி மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நிறைவுற்று தலைவர் மண்டபத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கட்சியின் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி குழப்பகரமான சூழல் ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரிப்பதற்காக கட்சியின் தவிசாளர் ஏ. எல். அப்துல் மஜீத், பிரதித் தலைவர் சட்டத்தரணி எஸ். எம். ஏ. கபூர் மற்றும் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதர் ஆகியோர் அடங்கிய குழுவொன்றை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உடனடியாக நியமித்திருந்தார்.
கட்சியின் தவிசாளர் ஏ. எல். அப்துல் மஜீத், பிரதித் தலைவர் சட்டத்தரணி எஸ். எம். ஏ. கபூர் ஆகிய இருவரும் கூட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து நெரிசல் காரணமாக ஏனையோர் மண்டபத்தில் இருந்து வெளியேறும் வரை காத்திருத்த வேளையில் அப்போது மண்டபத்துக்குள் நடந்த விடயங்களை நேரடியாக அவதானித்திருந்தனர். அதற்கு மேலதிகமாக சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதனடிப்படையில் தலைமையிடம் இந்தக் குழு முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் கட்சியின் பாலமுனை பிரதேச அமைப்பாளர் ஏ. எல். எம். அலியார், இரண்டு வார காலத்துக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் உயர்பீட உறுப்பினர் பதவிகளில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருப்பதாக காரியப்பர் நேற்று (22) வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)