
posted 28th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
யாழ். மாவட்டத்தில் வறட்சி 22,044 குடும்பங்கள் பாதிப்பு!
யாழ். மாவட்டத்தில் 22,044 குடும்பங்களைச் சேர்ந்த 70,408 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற வறட்சி தொடர்பிலான கலந்துரையாடலின்போதே இத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, மருதங்கேணி, சங்கானை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுகளில் குடிநீர்ப் பற்றாக்குறையான பகுதிகளுக்கு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் நிதி உதவியுடன் பவுசர்கள் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போதைய நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் குடிதண்ணீர்த் தேவையுடைய குடும்பங்களின் தொகை அதிகரிக்கக்கூடும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படல்வேண்டுமென குறித்த பிரதேச செயலாளர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன் போது நெடுந்தீவு உட்பட தங்களால் நீர்வழங்கல் செய்யப்படும் பிரதேசங்களிற்கு குடிதண்ணீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கக்கூடிய வகையில் நீர்வழங்கலை மேற்கொள்ள முடியுமெனவும் தற்போது மாவட்டத்தில் அவ்வாறான
சேவைகள் 18 குடிதண்ணீர் மூலங்கள் மூலமாக செயற்படுவதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறியியலாளர் தெரிவித்தார்.
அதேவேளை எதிர்வரும் கால வறட்சியினை கருத்திற் கொண்டு நீர்ப் பாவனையில் விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக நீரைப் பாவிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)