
posted 2nd August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
பலவகைச் செய்தித் துணுக்குகள்

முதிரை மரப் பலகைகளுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது
எஸ் தில்லைநாதன்
கிளிநொச்சியில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரப்பலகைகளுடன் ஒருவர் நேற்று (01) செவ்வாய் கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியில் நபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் மரப்பலகைகள் வைத்திருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே விசேட அதிரடிப் படையினரால் இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான முதிரைப் பலகைகளை பொலிஸார் கைப்பற்றினர்.
யாழில் 3 பிள்ளைகளின் தாய் தொடர் காய்ச்சலால் மரணம்!
எஸ் தில்லைநாதன்
யாழ்ப்பாணத்தில் தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சுகந்தன் ஜான்சி (வயது - 46) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த சில தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில். தனியார் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
காய்ச்சலின் தீவிரத் தன்மை அதிகரித்தமையால் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (31) திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விளக்கமறியல்
(ஏ.எல்.எம்.சலீம்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தில் பாரிய இயந்திரத்தை கொள்ளையிட்ட இரண்டு இளைஞர்களை எதிர்வரும் எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ். தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
காத்தான்குடி பொலிஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனுமார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரிய கட்டடங்களுக்கான சீமந்து கலவை இயந்திரத்தில் உள்ள பாரிய இயந்திரத்தை திருடியமைக்காகவே மேற்படி இளைஞர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பல லட்சம் ரூபாய் பெறுமதியான பாரிய இயந்திரத்தை நாவற்குடா பிரதேசத்தை சேர்ந்த 21 மற்றும் 22 வயதை சேர்ந்த இளைஞர்கள் திருடி இருந்தனர்.
குறித்த குற்றச்சாட்டின் பேரில் மேற்படி இளைஞர்கள் காத்தான்குடிபொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ எம் எஸ் ஏ. ரஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் விசாரணை நடத்திய பின்னர் மட்டக்களப்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது 8ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்காலிகமாக மூடப்பட்ட வவுனியா சிறைச்சாலை!
எஸ் தில்லைநாதன்
அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 04 கைதிகள் அடையாளம் காணப்பட்டமையினால் ஆடி மாதம் 25 ஆம் திகதி முதல் வவுனியா சிறைச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கைதிகளை உறவினர்கள் சந்திக்கும் நடவடிக்கை மற்றும் வழக்கு செயற்பாடுகளுக்காக கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கை ஆகியன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் 08.08.2023 ஆம் திகதி வரை சிறைச்சாலை மூடப்பட்டிருக்கும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
வவுனியா சிறைச்சாலையில் 400 இற்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
எஸ் தில்லைநாதன்
முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று முன்தினம் (31) திங்கள் மாலை 4 மணியளவில் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அக்கரைவெளியில் 1500 ஏக்கர் காணியை சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சமஷ்டித் தீர்வை வலியுறுத்தி திருமலையிலும் போராட்டம்
(ஏ.எல்.எம்.சலீம்)
தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி, திருகோணமலையிலும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் தமிழ்பேசும் மக்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வான சமஷ்டியை வலியுறுத்தி நேற்று (31) திருகோணமலை மக்ஹெய்சர் மைதானத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய செயல்முனைவின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு வடக்கு-கிழக்கு தழுவிய ரீதியில் இந்த ஜனநாயகப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)