
posted 1st August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
ஹெரோய்னுக்கு அடிமையான யாழ். இளைஞர் புனர்வாழ்வுக்கு
எஸ் தில்லைநாதன்
உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் பயன்படுத்திய 21 வயதான இளைஞர் ஒருவர் நீதிமன்றப் பணிப்புக்கு அமைவாக கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்கொல்லி போதைப்பாவனைக்கு இளைஞர் அடிமையானதையடுத்து வீட்டார் பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர். பொலிஸார் இளைஞனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது உயிர்கொல்லி போதைப் பாவனைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் ஊடாக அவரைக் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவைச் சேர்ந்த குடும்பம் தமிழகத்தில் தஞ்சம்
எஸ் தில்லைநாதன்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர்களான 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை நேற்று (31) திங்கட்கிழமை காலை சென்றடைந்தனர்.
தகவல் அறிந்த தமிழக கடற்படையினர் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
எஸ் தில்லைநாதன்
கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் தொனிப்பொருளில் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் திங்களன்று (31) முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டோர் வடக்கு- கிழக்கில் நிரந்தரமான அரசியல் தீர்வை வலியுறுத்தியதுடன், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வொன்றை சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என்ற பிரகடனத்தை முன்வைத்தனர்.
அத்துடன் கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும், கௌரவமான உரிமைகளுக்கான மக்களின் குரல், வடக்கு-கிழக்கில் அதிகார பரவலாக்கம் என்பது ஜனநாயக உரிமையாகும் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பிரதான வீதியில் விபத்து
(ஏ.எல்.எம்.சலீம்)
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடாவில் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையிலிருந்து மாங்காய்களை ஏற்றிக்கொண்டு மினுவான்கொடை நோக்கி வந்த லொறி ஒன்று சாரதியின் அதிக தூக்கம் காரணமாக மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்னால் உள்ள மின்கம்பத்தில் மோதி பாரிய விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதன் காரணமாக லொறி பாரிய சேதமடைந்துள்ளதுடன் பயணித்த லொறியின் நடத்துநருக்கு பாரிய காயங்கள் ஏற்பட்டு பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென மின் கம்பத்தில் மோதியதன் காரணமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் சாரதியைக் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் திருமலையில் கைது
(ஏ.எல்.எம்.சலீம்)
திருகோணமலை, துறைமுக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்யததாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நபரை சோதனைக்கு உற்படுத்திய வேளையில் சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த 210 மில்லிகிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் ஏறாவூர்-2, அம்பாறை பிரதேசவாசி எனவும் சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட போதைபொருளையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)