
posted 9th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டும்
“கடந்த 33 வருடங்களுக்கு முன்பு ஏதுமறியாத 54 அப்பாவித் தமிழ் மக்கள் வெட்டியும், கொத்தியும், கொடூரமாக குரூரமாக கொலை செய்யப்பட்டார்கள். இதுவரை அப்படுகொலைக்கு நீதியான விசாரணையோ, எந்த நிவாரணமோ கிடைக்கவில்லை. அதனை இந்த அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும்” இவ்வாறு திராய்க்கேணி படுகொலையின் 33ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றபோது கலந்துகொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கோரிக்கை விடுத்தார்.
திராய்க்கேணி படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சமூக செயற்பாட்டாளர் துரையப்பா காத்தவராயன் (காந்தன்) தலைமையில் திராய்க்கேணி சித்திவிநாயகர் ஆலய முன்றலில் நடைபெற்றது.
அங்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் சமூக செயற்பாட்டாளர் தா. பிரதீபன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
அங்கு ஜெயசிறில் மேலும் பேசுகையில்;
எதுவும் அறியாத அப்பாவி தமிழ் மக்களை 33 வருடங்களுக்கு முன்பு காட்டுமிராண்டித்தனமான சஹ்ரானை போன்ற ஒருசில முஸ்லிம் காடையர்கள், அரச படையுடன் சேர்ந்து இந்த இனப்படுகொலையை நடத்தினர் .
அந்த நிலத்தை அபகரிக்கவேண்டும் என்ற ஒரே நோக்குடன் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன.
தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கோ எதுவுமே செய்யாமல் புறக்கணித்து வந்திருக்கின்றன.
அதனால் அவர்கள் இன்றும் பலமின்றி அடிமையாக வாழ்ந்து வருகிறார்கள்.
எனவே, இந்த இனப்படுகொலைக்கு நீதியான விசாரணை வேண்டும். அவர்களுக்கு நீதி நிவாரணம் கிடைக்கவேண்டும் .
இங்கு இடம் பெற்ற குரூரமான இப்படியான படுகொலைகள் இனியும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தனது அப்பா, பாட்டன், பாட்டி, பூட்டி ஆகியோர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என்பதனை இன்றைய இளம் சமுதாயமும் அறிய வேண்டும் என்பதற்காக இதனை நாங்கள் செய்கின்றோம். என்றார்.
33 வருடங்களுக்கு முன்பு காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்ட மக்களின் உறவுகள் கதறியழுது கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)