
posted 17th August 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
திருமலை சித்த மருத்துவ பீட அங்குரார்ப்பண நிகழ்வு
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக கடந்த 14ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தரமுயர்த்தப்பட்டது.
இதனை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு திருமலை வளாக சித்த மருத்துவ பீடத்தில் இடம்பெறவுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுக்கு திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் ச. தேவதாசன், சித்த மருத்துவ பீட பதில் பீடாதிபதி பேராசிரியர் சோ. சுதர்சன் மற்றும் துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இவ்வலகினூடாக சித்த மருத்துவ கற்கைநெறி, பாரம்பரிய மருத்துவ நெறிகளை தற்போதைய நவீன சவால்களுக்கெற்ப ஆராய்ச்சியுடன் கூடியதாக கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சித்த மருத்துவ அலகு, இலங்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் கடந்த 2023.06.14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் சித்த மருத்துவ பீடமாக தரமுயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)